கோபித்துக் கொண்டு போன கணவர்.. மனம் உடைந்த பெண் காவலர்.. விபரீத முடிவு!

Su.tha Arivalagan
Nov 14, 2023,01:45 PM IST

- மஞ்சுளா தேவி


புதுச்சேரி:  கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவர் தன்னை விட்டுப் பிரிந்து போனதால் வருத்தமடைந்த பெண் காவலர் தூக்குப் போட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி மாநிலம் வில்லியனூரைச் சேர்ந்தவர் சத்யா. 26 வயதான இவர் ஆயுதப் படையில் காவலராக இருந்து வந்தார். இவரது கணவர் பெயர் வினோத். இவர் மின்துறையில் வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. அதற்கு நான்கு வயதாகிறது.


சமீபத்தில் சத்யாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவியை விட்டுப் பிரிந்து திருபுவனத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டார் வினோத். கணவர் பிரிந்து போனதால் வருத்தமும், வேதனையும் அடைந்தார் சத்யா. இந்த நிலையில் தனது குழந்தையைக் கூட்டிக் கொண்டு வினோத் பெற்றோர் வீட்டுக்குப் போனார். அங்கு குழந்தையை விட்டு விட்டு வில்லியனூர் திரும்பினார். வீடு திரும்பிய அவர்,  மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டார்.




தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.  கணவர் பிரிந்து போனதற்காக தற்கொலை வரை விபரீதமான முடிவெடுத்த சத்யாவின் செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.


தற்கொலை தவறானது.. தவிருங்கள்


எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு தற்கொலையாகாது. எந்தப் பிரச்சினையையும் உரிய முறையில் அணுகினால் நிச்சயம் தீர்த்து வைக்க முடியும். தீர்வு காண முடியும். எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை என்றால் வாழ்க்கை என்னாவது.. இன்று சத்யாவின் முடிவால் அவரது குழந்தை தாயை இழந்துள்ளது. நாளை தனது குழந்தையைப் புறக்கணித்து விட்டு வினோத் வேறு திருமணம் செய்து கொண்டால் அந்தக் குழந்தையின் கதி என்னாவது.. இதையெல்லாம் அந்தப் பெண் சற்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டும்.


யாராக இருந்தாலும் சரி உடனே மனம் உடைந்து போய் விடாதீர்கள்.. உரிய முறையில் பேசிப் பாருங்கள்.. விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறப்பான வாழ்க்கை.. பிரச்சினையை உரியவர்களிடம் கொண்டு சென்று தீர்க்கப் பாருங்கள்.. வாழ்க்கை அழகானது.. அது இயல்பாக முடிய வேண்டும்.. நாமே முடித்துக் கொள்ளக் கூடாது. தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் வாழப் பழகுங்கள்.. அதுதான் அழகானதும் கூட.