பலாத்காரம் செய்து விட்டார்.. கணவரின் முதல் மனைவி மகன் மீது புகார் கூறிய ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி!

Su.tha Arivalagan
Jul 10, 2024,01:05 PM IST

காஸிப்பூர், உத்தரப் பிரதேசம்: கணவரின் முதல் மனைவியின்  மகனும், அவரது நண்பரும் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக ஓய்வு பெற்ற ஜம்மு காஷ்மீர் மாநில ஐஏஎஸ் அதிகாரியின் 2வது மனைவி உ.பி. போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் தனது கணவர் வீட்டார் வரதட்சணைக் கொடுமை செய்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார். உ.பி. மாநிலம் காஸிப்பூர் காவல் நிலையத்தில் தனது புகாரை அவர் கொடுத்துள்ளார். போலீஸார் இதுகுறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.




புகார் கூறிய பெண்ணுக்கு வயது 50க்குள் இருக்கும்.  காஸிப்பூரில்தான் வசித்து வருகிறார். பிறந்தது முதல் ஆதரவற்றோர் முகாமில் வளர்ந்தவர் இவர். 2020ல் இவருக்கும், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அந்த ஐஏஸ் அதிகாரிக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது. இந்த அதிகாரிக்கு ஏற்கனவே முதல் மனைவி உள்ளார். அவர் மூலம் மகன், மகளும் உள்ளனர். 


2வது திருமணம் செய்து கொண்ட பின்னர் முதல் மனைவி, அவரது மகன், மகள், குடும்பத்தினர் சேர்ந்து இந்தப் பெண்ணை கொடுமைப்படுத்தி வந்தனராம். வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், ஏப்ரல் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை இவரை, கணவரின் முதல் மனைவியின் மகனும், அவனது கூட்டாளியும் சேர்ந்து ஒரு வீட்டில் அடைத்துள்ளனர். அந்த வீட்டில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதன் உச்சமாக இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டனராம். அவர் கதறி அழுது கெஞ்சிய நிலையில், உங்களை விடுவிக்கிறோம். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டி விடுவித்துள்ளனர்.


அதன் பின்னர் லக்னோ வரை அந்தப் பெண்ணை அழைத்து வந்து விட்டுள்ளனர். போலீஸிடம் போனால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதல் மனைவிக்குத் தெரிந்ததும் அவரும் கூப்பிட்டு இவரை மிரட்டியுள்ளார். போலீஸில் புகார் கொடுத்தால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். ஆனால் இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் இந்தப் பெண் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.


இந்தப் பரபரப்பான புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.