"பெண்கள் 70 மணி நேரத்திற்கும் மேலே வேலை பாக்கறாங்களே".. நாராயணமூர்த்திக்கு நச்சுன்னு ஒரு கேள்வி!

Su.tha Arivalagan
Oct 30, 2023,06:35 PM IST

டெல்லி: இந்திய ஐடி துறை இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறிய யோசனைக்கு பலரும் எதிர்ப்பும், கேலி கிண்டலும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இடில்வெய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ராதிகா குப்தா பளிச்சென ஒரு கேள்வி கேட்டுள்ளார்.


நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மனதில் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார் நாராயணமூர்த்தி. இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 70 மணி நேரம் உங்களுக்கே வேலை பார்த்துட்டிருந்தா, குடும்பம் குட்டியை யார் பார்ப்பா.. உடல் ஆரோக்கியத்தை யார் பார்ப்பா.. இதெல்லாம் சாத்தியமா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.




இந்த நிலையில் இடில்வெய்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராதிகா குப்தா பளிச்சென ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அவரது கேள்விக்கு ஏகப்பட்ட ஆதரவு கிடைத்து வருகிறது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் போட்டுள்ள டிவீட்:


அலுவலகத்துக்கும், வீட்டுக்குமாக பல இந்தியப் பெண்கள் பல காலமாக வேலை பார்த்து ஓடிக் கொண்டுள்ளனர். 70 மணி நேரம் இல்லை, அதையும் தாண்டி பல மணி நேரம் அவர்கள் வேலை பார்க்கிறார்கள்.  நாட்டைக் கட்டியமைக்க அலுவலகத்திலும், இந்தியத் தலைமுறையை (குழந்தைகள்) கட்டியமைக்க வீட்டிலுமாக உழைத்துக் கொட்டுகிறார்கள். வருடக் கணக்கில், பல தலைமுறைகளாக இது நடக்கிறது.. வாய் நிறைய புன்னகையும், முகம் நிறைய மலர்ச்சியும் மட்டும் சிந்தியபடி இதைச் செய்கிறார்கள். எந்தக் கோரிக்கையும் அவர்கள் வைப்பதில்லை. ஆனால் ஒருவர் கூட எங்களைப் பற்றி டிவிட்டரில் விவாதிப்பதில்லை.. அவர்களுக்கு என்ன சம்பளம் தந்தீர்கள்.. அதையும் பேசுவதில்லை என்று கூறியுள்ளார் ராதிகா குப்தா.


அவரது டிவீட்டுக்கு ஏகப்பட்ட பேர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  ராதிகா குப்தா சொல்வது சரிதானே.. எத்தனை பேர் பெண்களின் சுமையைப் பகிர்ந்து கொள்கிறோம்.. அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைத் தருகிறோம்.. அவர்களை மதிக்கிறோம்.. இல்லைதானே.. ஒட்டுமொத்தப் பெண்களின் பிரதிநிதியாகவே ராதிகாவின் குமுறலைப் பார்க்க வேண்டியுள்ளது.