உத்திர பிரதேசத்தில்.. ஓநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பாதிப்பு.. வனத்துறையினர் தீவிர வேட்டை

Manjula Devi
Sep 04, 2024,03:27 PM IST

லக்னோ:   உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் அட்டகாசத்தால் அவற்றைப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிபட்டுள்ள நிலையில் மற்ற  ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


இந்தியா-நேபாள எல்லையான டெராய் பகுதியில் சமீபமாக காலமாக ஓநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த ஓநாய்கள் ஊருக்குள் நுழைந்து குழந்தைகளை குறி வைத்து கொன்று வருகிறது. கடந்த வாரம் உத்திரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் ஓநாய்கள் கூட்டம் தாக்குதலில் இறங்கியது. இந்த தாக்குதலில் ஆறு குழந்தைகள் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். 




இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த  ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் ஆப்ரேஷன் பேடியா என்பதை தொடங்கி இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அப்பகுதிகளில் ஆங்காங்கே கூண்டுகள் அமைத்து ஓநாய் பிடிக்க டிரெயின்கள், கேமராக்கள், உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் இதுவரை 4 ஓநாய்கள் பிடிபட்டுள்ளன.


இந்த நிலையில் மனித உயிர்களைக் கொன்று விழுங்கும் மற்ற ஓநாய்கள் தேடிப்  பிடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் 12 பேரின் தலைமையில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர் வனத்துறையினர்.


இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மோனிகா ராணி கூறுகையில், ஓநாய்களைப் பிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி அவை இடத்தை மாற்றி உலா வருகின்றன. இதனால் அவற்றின் நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது. 5, 6 நாட்களுக்கு ஒருமுறை ஓநாய்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றன. வனத்துறை தீவிரமாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்