லோக்சபா தேர்தலில்.. ஒரே சின்னத்தில் போட்டியிடுமா விடுதலைச் சிறுத்தைகள்.. கிடைக்குமா "பானை"?

Meenakshi
Feb 21, 2024,08:35 AM IST

டெல்லி: லோக்சபா தேர்தலில் 5 மாநிலங்களில் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள்  கட்சி அறிவித்துள்ளது. அதேசமயம், பானை சின்னத்தில் போட்டியிடவும் அது விருப்பம் தெரிவித்து அந்த சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் விண்ணப்பித்துள்ளது. சின்னம் கிடைத்தால் இந்த முறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும்.


மதுரையில் தலித் சிறுத்தைள் இயக்கமாக உருவாகி, பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக மாறிய இயக்கம்தான் "விசிக".  தலித் தலைவர் மலைச்சாமியால் உருவாக்கப்பட்ட இந்த  இயக்கம் பின்னர் தொல். திருமாவளவன் தலைமைக்கு மாறியது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய  தலித் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திகழ்கிறது. இக்கட்சிக்கு லோக்சபாவில் 2 எம்.பிக்களும், சட்டசபையில் 4 உறுப்பினர்களும் உள்ளனர்.


விதம் விதமான சின்னங்கள்




1999ம் ஆண்டுதான் முதல் முறையாக தேர்தல் களத்தில் நுழைந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி விதம் விதமான சின்னங்களில்தான் போட்டியிட்டு வருகிறது. நிலையான சின்னம் அந்தக் கட்சிக்கு இதுவரை கிடைத்தபாடில்லை.


கடந்த சட்டசபைத் தேர்தலில் பானைச் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு 4 இடங்களில் வென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது. ஆனால் 2 தொகுதிகளிலும் 2 சின்னத்தில் அது போட்டியிட்ட வினோதம் நிகழ்ந்தது.

விழுப்புரம் தனி தொகுதியில் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அதேசமயம், சிதம்பரம் தனி தொகுதியில், பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார் அதன் தலைவர் திருமாவளவன்.


ஒரே சின்னத்தில் போட்டியிட தீவிரம்




இந்தநிலையில் வரும் லோக்சபா தேர்தலில் தனி சின்னத்திலேயே போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் தீவிரம் காட்டி வருகிறது.  அப்போதுதான் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும், சின்னமும் நிரந்தரமாகும் என்பது அக்கட்சியின் கருத்தாகும்.  இதுதொடர்பாக பானை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் தொல்.திருமாவளவன் மனு ஒன்றை அளித்துள்ளார்.


இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னம் ஒதுக்கக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டதால் தான் அதனை வழங்க கூறியுள்ளோம். முன்கூட்டியே சின்னத்தை ஒதுக்க கேட்டு உள்ளோம். 


5 மாநிலங்களில் களம் காணும் விடுதலைச் சிறுத்தைகள்




நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் படி திமுக நெருக்கடி எதுவும் கொடுக்கவில்லை.  நாடாளுமன்றத் தேர்தலில் பொது தொகுதி ஒன்றை ஒதுக்கும்படி திமுகவுடன் கேட்டுள்ளோம். எங்களைப் பொறுத்தவரை 4 தொகுதிகள் எங்களது நோக்கமாகும். கேட்டிருக்கிறோம். 


தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஆளும் கட்சியின தலையீடுகள் இருப்பது போல் தெரிகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆளும் கட்சி எதிர் கட்சி என்று இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.


பெரம்பலூரும் கிடைக்குமா?




கடந்த முறை கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயகக் கட்சி இந்த முறை கூட்டணியில் இல்லை. அக்கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றது. பாரிவேந்தர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் பெரம்பலூர் தொகுதியில் திமுகவே இந்த முறை போட்டியிடுமா அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அது போகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


தனக்கு ஒரு பொதுத் தொகுதியும் தேவை என்று திருமாவளவன் தொடர்ந்து கோரி வருகிறார் என்பது நினைவிருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு காலத்தில் தலித் மக்களுக்கான கட்சியாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கான கட்சியாக அது மாறி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.