கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில்.. பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Manjula Devi
May 31, 2024,03:53 PM IST

சென்னை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக  பள்ளிகள் திறப்பு ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 10ம் தேதிக்கு திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கு வரும் ஜூன் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது  புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் கடும் பாதிப்பு அடைவார்கள். இதனால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.


இதன் அடிப்படையில் மாணவ மாணவிகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட  அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 6-க்கு பதிலாக ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டிலும் வெயிலின் தாக்கத்தால் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. மேலும் பல இடங்களில் வெயில் மீண்டும் சதத்தைத் தாண்டி அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளி திறப்பை ஜூன் 12க்கு ஒத்தி வைக்க  வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


பல்வேறு அரசியல் கட்சியினரும் கூட பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவொளி வெளியிட்டுள்ளார். அதன்படி ஜூன் 6ம் தேதிக்குப் பதில் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல பள்ளிகள் ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.