"பாஸ் என்ற பாஸ்கரன் 2"... வருமா வராதா.. சந்தானம் இருப்பாரா.. மாட்டாரா?

Su.tha Arivalagan
Dec 08, 2023,06:01 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை:  பாஸ் என்கிற பாஸ்கரன்.. தமிழ் சினிமாவில் வெளியான ஒரு அல்ட்டிமேட் காமெடி குடும்பப் படம். அப்படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.. அதை விட முக்கியமாக அதில் சந்தானம் இருப்பாரா என் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.


நடிகர் ஆர்யா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் படம் வெளிவந்தது. சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய எம். ராஜேஷ் இப்படத்தை இயக்கியவர். இப்படத்தை கே .எஸ் ஸ்ரீனிவாசன் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்


இப்படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக இருந்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஆர்யா, நயன்தாரா, மற்றும் சந்தானம் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை கலந்த நடிப்பு  அனைவராலும் பேசப்பட்டது. இப்படம் வெளியாகும் போது சந்தானமும், ஆர்யாவும் இணைந்து இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளிவந்தது. இப்படத்தின் போஸ்டர் போன்று இவர்களின் கூட்டணியும் நன்றாக இருந்தது.




ஆர்யாவும், சந்தானமும் இணைந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். அதில் உச்சகட்டமான ஹிட் என்றால் அது பாஸ்தான். 


ஆனால் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார் சந்தானம். காமெடியனாக அவர் நடிப்பதில்லை. அவரது படத்தில் கூட பிரதான காமெடியன் கிடையாது. இவரேதான் அதையும் பார்த்துக் கொள்கிறார்.நடிகர் விவேக்கின் காமெடிக்குப் பிறகு சந்தானத்தின் லாஜிக் கலந்த காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்த இவர் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். 


ஆனால் சமீப காலமாக சந்தானம் நடித்த சபாபதி, குளுகுளு, ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற ஒரு சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து வெளியான டிடி ரிட்டன்ஸ் என்ற படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. இதன் பிறகு வந்த கிக், 80ஸ் பில்டப் ஆகிய படங்களும் தோல்வியை தழுவியது.


இந்நிலையில் நடிகர் சந்தானம் தற்போது வடக்கம்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து பாஸ் என்ற பாஸ்கரன் 2 படத்தில் ஆர்யாவுடன் இணைந்து காமெடியனாக நடிக்க சந்தானத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யோசித்து வருகிறாராம். ஹீரோவாகி விட்டோம்.. மறுபடியும் காமெடியனாகவா என்று அவர் நினைப்பதாக தெரிகிறது.


சந்தானம் திரும்பவும் காமெடிக்குத் திரும்பினால் நிச்சயம் மிகப் பெரிய ரவுண்டு வர முடியும்.. காரணம், தமிழ் சினிமாவில் சந்தானத்தின் இடம் இன்னும் அப்படியேதான் உள்ளது. அவரை வந்து அதை நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் பாஸ்.!