கட்டி அணைத்து.. டீ குடித்து.. சமரசமான நாங்குநேரி காவலரும், அரசு கண்டக்டரும்.. பிரச்சினை சால்வ்ட்!

Meenakshi
May 25, 2024,04:34 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே திடீரென மூண்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அவரது உத்தரவின் பேரில் உள்துறைச் செயலாளர் அமுதா மற்றும்  போக்குவரத்துத் துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஆகியோர் அவசரமாக ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட காவலரும், அரசு பஸ் கண்டக்டரும் சந்தித்துப் பேசி சமரசமாகியுள்ளனர். இதுதொடர்பாக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.


செட்டிக்குளத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் ஆறுமுகபாண்டி என்பவர் பயணித்தார். அப்போது, காவலர் ஆறுமுகப்பாண்டியிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.  இதற்கு ஆறுமுகபாண்டி  டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். மேலும், பணியில் இருக்கும் காவலர்கள் அரசு பேருந்துகளில் இவசமாக பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் நடத்தனருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை  அதே பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். 




இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக்கப்பட்டது, பரப்பப்பட்டது. இதுதொடர்பாக விளக்கமளித்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் "அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க முடியாது. அதற்கான அனுமதி வாரண்ட் இருந்தால் மட்டும் தான் பயணிக்க முடியும் " என்று தெரிவித்தது. போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இப்படி சாதாரணமாக ஆரம்பித்த இந்த மோதல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து மேலும் பரபரப்பைக் கூட்டியது. அதாவது, அரசுப் பேருந்துகளுக்கு எதிராக போக்குவரத்துக் காவல்துறை ஒரு நடவடிக்கையில் குதித்தது. அதாவது, பேருந்து நிறுத்தத்தை தாண்டி பேருந்தை நிறுத்துதல், சீருடை சரியாக அணியாதது, சீட் பெல்ட் போடாதது, நோ பார்க்கிங்கில் பஸ்ஸை நிறுத்தியது என்று பல்வேறு காரணங்களைக் காட்டி அரசு பஸ் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கத் தொடங்கியது போக்குவரத்து போலீஸ். 




இதுவரை அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது இதுபோன்ற நடவடிக்கையெல்லாம் எடுக்கப்பட்டதில்லை என்பதால் இது பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. காவலர் ஆறுமுகச்சாமி விவகாரம் தொடர்பாகவே இப்படி போக்குவரத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி விட்டதாக பரபரப்பு கிளம்பியது. இந்த விவகாரம் மெல்ல மெல்ல அரசியலாக்கப்படவும் ஆரம்பித்தது. அரசின் இரு பெரும் துறைகளை மோத விட சிலர் சதி செய்வதாகவும், இதை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கினார்.


உள்துறை செயலாளர் அமுதாவையும், போக்குவரத்துத் துறை செயலாளர் பனீந்திர ரெட்டியையும் இந்த விவகாரத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். அதன் பேரில்,  இரு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட காவலரும், கண்டக்டரும் நேரில் சந்தித்து பேசி சமரசமாகியுள்ளனர். இருவரும் கட்டிப் பிடித்தும், இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளனர்.  மேலும் இருவரும் சேர்ந்து டீ குடிப்பது போலவும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு வழியாக இந்த பிரச்சினை சரியாகியுள்ளது இரு தரப்பினருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.


இருவரும் சந்தித்து பேசி சமரசமாகி டீ குடிப்பது போல வீடியோ எடுக்கும் ஐடியா யார் கொடுத்ததுன்னு தெரியலை.. ஆனாலும் ஐடியா சூப்பரா இருக்கு..!