ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து இந்தியாவை பெரிய பூகம்பம் தாக்கும்.. நெதர்லாந்து ஆய்வாளர்

Su.tha Arivalagan
Feb 08, 2023,09:33 AM IST
டெல்லி: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்துக் கூறிய நெதர்லாந்து நாட்டு ஆய்வாளர் பிராங்க் ஹூகர்பீட்ஸ், அடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என கூறியிருப்பதாக ஒரு செய்தி பரவியுள்ளது.



துருக்கி, சிரியாவை மிகப் பெரிய நிலநடுக்கம் தாக்கி இதுவரை 5000க்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளனர். நிலநடுக்கம் தாக்கிய பகுதிகள் உருக்குலைந்து போய்விட்டன. உலக நாடுகள் துருக்கி, சிரியாவுக்குக் கை கொடுத்து வருகின்றன.

இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே அதாவது பிப்ரவரி 3ம் தேதி பிராங்க் ஹூகர்பீட்ஸ் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் மிகப் பெரிய பூகம்பம் சிரியா, துருக்கி பகுதியில் ஏற்படலாம் என்று கணித்திருந்தார். அவர் கூறியபடி பூகம்பம் ஏற்பட்டு விட்டதால் தற்போது உலகின் மொத்த கவனமும் அவர் மீது திரும்பியுள்ளது.

இந்த நிலையில் ஹூகர்பீட்ஸ், அடுத்த பூகம்பம் குறித்து பேசியுள்ளதாக கூறப்படும் வீடியோ வைரலாகியுள்ளது. அதில், ஆப்கானிஸ்தான் ஆரம்பித்து பாகிஸ்தான்,இந்தியா வழியாக ஒரு மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும். அது இந்தியப் பெருங்கடலில் போய் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமயமலைப் பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது சகஜமானதுதான். அடிக்கடி ஏற்படும் இந்த நில அதிர்வுகள் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி உணரப்படும். தலைநகர் டெல்லியிலும் கூட அவ்வப்போது இதுபோன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு. இந்த நிலையில் மிகப் பெரிய நிலநடுக்கம் இந்தியாவைத் தாக்கலாம் என்று ஹூகர்பீட்ஸ் கூறியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இருப்பினும் இந்த நிலநடுக்கம் எப்போது நிகழும் என்பதை ஹூகர்பீட்ஸ் கணித்துக் கூறவில்லை. தேதி குறிப்பிடாமல் சொல்லியுள்ளார். சிலர் இந்த கூற்றை நம்பினாலும் பலர் இதை எதிர்த்து கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். இயற்கையான பூகம்பங்களை நிச்சயம் நம்மால் கணிக்க முடியாது என்று அவர்கள் ஹூகர்பீட்ஸுக்குப் பதிலளித்து வருகின்றனர்.