அரசியலிலும் அதிரடி காட்டுவாரா "ஆண்டவர்"?...கமல்ஹாசனின் அடுத்த மூவ்...தொண்டர்கள் எதிர்பார்ப்பு என்ன?

Aadmika
Jan 25, 2024,05:17 PM IST

சென்னை : ஆண்டவர் என்ன செய்யப் போகிறார்.. அவர் எடுத்து வைக்கப் போகும் மூவ் என்ன.. இதுதான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள், கமல்ஹாசனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அத்தனை பேரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


நடிகர் கமல்ஹாசன், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு துணை நடிகர், நடிகர், டாப் ஹீரோ, பாடகர், நடன கலைஞர், தயாரிப்பாளர் என பல பரிமானங்களில், தான் தடம் பதித்த அனைத்திலும் வெற்றிக் கொடி கட்டி, பல சாதனைகளை படைத்து விட்டார். உலக நாயகன், ஆண்டவர், நம்மவர் என சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி அரசியல் களத்திலும் தடம் பதித்துள்ளார். 


முதல் தேர்தலிலேயே அசத்திய கமல்




போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கணிசமான ஓட்டுக்களை பெற்று தமிழக அரசியல் களத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். கடந்த சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக அரசியலில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியாக இருந்தது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தேசிய கட்சிகளுக்கே டஃப் கொடுத்தது கமலின் மக்கள் நீதி மய்யம். கணிசமான வாக்குகளையும் அள்ளியது.


முந்தைய அதிமுக ஆட்சியின் போதும் ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சியாக இல்லாத போதும் மக்கள் சார்பில் குரல் கொடுத்தார் கமல். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்து பதிவிட்டும், மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தும் வந்தார். அவரது அதிரடியான பல கருத்துக்கள் அரசியல் களத்தை சூடாக்கின.


சினிமாவில் மீண்டும் பிசி




தேர்தல் இல்லாத சமயத்திலும் கூட அரசியல் களத்தில் படுஆக்டிவாக மக்களை சந்தித்து வந்த கமல், கடந்த ஓராண்டிற்கும் மேலாக மீண்டும் சினிமாவில் படுபிஸியாக இருந்து வருகிறார். தேசிய, மாநில கட்சிகள் இந்த ஆண்டு நடக்க இருக்கும் லோக்சபா தேர்தல் மட்டுமின்றி அடுத்த ஆண்டு நடக்க போகும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு சேர்த்து  கூட்டணி, தொகுதி, வேட்பாளர் தேர்வு என மும்முரமாக இருந்து வருகிறார்கள். ஆனால் கமல், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, பிஸியாகி நடித்து வருகிறார். இதனால் தேர்தல் குறித்து அவரது பிளான் என்ன, அவரது மூவ் என்னவாக இருக்கும் என்ற ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் எதிர்பார்க்க துவங்கினர்.


சமீபத்தில் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல், "தேர்தல் வேலைகளை நீங்கள் பாருங்கள். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்" என கூறியதால் தொண்டர்கள் செம உற்சாகமாக தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். கமலின் இந்த பேச்சு, அவர் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கி விட்டார் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. கூட்டணி என்றால் யாருடன் கமல் கூட்டணி வைக்க போகிறார் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. கண்டிப்பாக தேசிய கட்சியான பாஜக.,வுடனும், மாநில கட்சியான அதிமுக.,வுடன் அவர் கூட்டணி வைக்கப் போவதில்லை. இந்த இரு கட்சிகளையும் கமல் நேரடியாக எதிர்ப்பது அனைவருக்கும் தெரியும்.


கூட்டணியா தனித்துப் போட்டியா




காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்றது, திமுக.,வுடன் சுமூக உறவை மேற்கொள்வது, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனான நட்பு ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இவர்களுடன் அவர் வலுவான கூட்டணியில் இருக்க விரும்புவதையே உணர்த்துகிறது. மத்தியில் பாஜக.,வுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணியின் கூட்டத்திலும் கூட அவர் ஏற்கனவே பங்கேற்றுள்ளார்.  ஆனால் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரத்தை கவனித்து பார்த்தால் கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவதே சிறப்பானதாக இருக்கும் என கட்சி தொண்டர்கள் பலர் விரும்புகிறார்கள். 2021 தேர்தலில் கமல் கூட்டணி அமைத்ததால் தான் அவரால் பெரிய அளவில் அரசியலில் வளர்ச்சி காண முடியவில்லை என கருத்து தொண்டர்கள் பலரிடமும் நிலவுகிறது.


2021 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில் உருவாக்கப்பட்ட கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக திராவிட முன்னேற்றக் கழகம்,  மதச்சார்பற்ற ஜனதாதளம், கலப்பை மக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட தேமுதிக செய்த தவறுதான் இது.  ஆரம்பத்தில் சிறிய கட்சியாக இருந்த தேமுதிக, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. பிறகு விஜயகாந்த் கூட்டணி அரசியலை தேர்வு செய்ததே அவரின் அரசியல் பாதை வழி மாறி போவதற்கு காரணமாக அமைந்தது. 


அதிரடி அரசியல் தேவை




தற்போது விஜயகாந்த்தின் மறைவால் தேமுதிக தொண்டர்கள் ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளனர். ஆளும் திமுக.,வின் சில நடவடிக்கைகள் மக்கள் மனதில் ஒரு விதமான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சமயத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பெரிய அளவில் மக்களிடம் தனது பலத்தை காட்டுவதற்கு ஓங்கி குரல் கொடுக்காமல் உள்ளதால் அதிமுக மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் உள்ளது. பாஜக குறித்தும் மக்களிடையே நல்ல அபிப்பிராயம் இல்லை. குழப்பமான சூழல்தான் பெரிதாக உள்ளது.


இந்த சமயத்தில் கமல்ஹாசன் அரசியலில் அதிரடி காட்டினால், மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு உயர அதிக வாய்ப்பை ஏற்படுத்தும். மக்கள் பலத்தோடு லோக்பா மற்றும் சட்டசபை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் தனித்து களம் காணும் பட்சத்தில் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மட்டுமல்ல திமுக-அதிமுக அதிருப்தியாளர்கள், தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சியினர் உள்ளிட்டோர்களின் ஆதரவையும் பெற முடியும். கிட்டத்தட்ட அரவிந்த் கெஜ்ரிவால் போல கமல்ஹாசன் செயல்பட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.


வெற்றிடத்தை நிரப்புவாரா கமல்ஹாசன்




டில்லியில் ஊழலுக்கு எதிரான இயக்கமாக துவங்கி, பிறகு மக்களுக்கான கட்சியாக வளர்ந்து, ஆட்சியை பிடித்த கட்சி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி. பல அரசியல் நெருக்கடிகளையும் தாண்டி வெற்றிகரமாக ஆட்சியை தொடர்ந்து வரும் கெஜ்ரிவால், குஜராத் போன்ற மற்ற மாநிலங்களின் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் அளவிற்கு வளர்ந்து விட்டார். வடஇந்தியாவை பொறுத்த வரை ஆம்ஆத்மி தற்போது தவிர்க்க முடியாத கட்சியாக மாறி உள்ளது. டெல்லி, பஞ்சாபில் ஆட்சியமைத்துள்ளது. இந்த மாநில லோக்சபா தொகுதிகளிலும் எங்களுக்குக் கூட்டணி தேவையில்லை என்று கூறும் அளவுக்கு அவர்கள் வலுவான சக்தியாக மாறியுள்ளனர்.


அதே போல் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற செல்வாக்கான தலைவர்கள் தமிழகத்தில் தற்போது இல்லாத சமயத்தில் அந்த வெற்றிடத்தை நிரப்பும் மாற்று சக்தியாகவும், முக்கிய கட்சிகளின் மீதான அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் முகமாகவும், தென்னத்தின் கெஜ்ரிவாலாகவும் கமல்ஹாசன் உருவெடுக்க வேண்டும், அவர் அரசியலில் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.