மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள்.. ஜோதியை ஏந்திச் சென்ற.. ஜாக்கிசான்!

Manjula Devi
Aug 29, 2024,05:21 PM IST

பாரீஸ்:   பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான வான வேடிக்கையுடன் கோலாகலமாக தூவங்கியது. அப்போது ஒலிம்பிக் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கிசான் ஏந்தி சென்றார்.


உலக நாடுகள் முழுவதும் கலந்து கொள்ளும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூலை 26 ஆம் தேதியை ஒலிம்பிக் போட்டிகள் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைந்தது.




இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்று நள்ளிரவு பாரிஸில் தொடங்கியது. இதையொட்டி நேற்று வண்ணமயமான விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட அரங்கில் கண்கவர் நடன நிகழ்ச்சி, இசைக் கச்சேரி, வண்ண வண்ண வான வேடிக்கைகள், வண்ணப் புகைகள்  என மிகப்பிரமாண்டமாக பாரா ஒலிம்பிக் துவக்க விழா நடைபெற்றது. அப்போது இந்திய குழுவினர் வெள்ளை ஆடையுடன் தேசியக் கொடியேந்தி வலம் வந்தனர்.


இந்தப் போட்டிகள் இன்று முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை அதாவது  11 நாட்கள் நடைபெற உள்ளன. 167 உலக நாடுகளிலிருந்து  மொத்தம் 4400  போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா சார்பில் 32 பெண்களும், 52 ஆண்களும் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்க மகன் மாரியப்பன் தங்கவேல் (சேலம்), துளசிமதி முருகேசன் (காஞ்சிபுரம்), சிவராஜன் சோலைமலை (மதுரை), மனிஷா ராமதாஸ் (திருவள்ளூர்), நித்திய ஸ்ரீ சுமதி (சென்னை), கஸ்தூரி ராஜாமணி (சென்னை) ஆகியோர் பங்கேற்கின்றனர்.


கடந்த முறை இந்தியா 5 தங்கம் உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்றது. பதக்கப் பட்டியலில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்தது. இந்த முறை அதிக அளவில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்பதால் இந்தியாவிற்கு கூடுதல் பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்