சாம்பாய் சோரன் பாஜகவுக்குத் தாவப் போகிறாரா.. ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் பரபரப்பு!

Su.tha Arivalagan
Aug 18, 2024,01:40 PM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்,  அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் முதல்வராக பொறுப்பு வகித்து வந்த சாம்பாய் சோரன், பாஜகவுக்குத் தாவப் போவதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பு வகிக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மூத்த தலைவரான சாம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் ஜூலை மாதத்தில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.




ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் பொறுப்பை தன்னிடமிருந்து வாங்கியதை சாம்பாய் சோரன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியுடன் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் அவர் பாஜகவுக்குத் தாவப் போவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்தப் பின்னணியில் அவர் இன்று டெல்லிக்கு வந்தார். இதனால் அவர் பாஜகவில் சேருவது உறுதி என்று தகவல்கள் வேகமாக பரவியுள்ளன.


ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.  அதற்கு முன்பே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை பிளவுபடுத்த பாஜக முயல்வதாக  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். நேற்று கொல்கத்தா சென்றிருந்த சாம்பாய் சோரன் அங்கு பாஜக தலைவர் சுவந்து அதிகாரியைச் சந்தித்துப் பேசினார். இவர் திரினாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவிலே சேர்ந்தவர் என்பது நினைவிருக்கலாம். சுவந்து அதிகாரியை, சாம்பாய் சோரன் சந்தித்திருப்பதால் நிச்சயம் அவர் பஜாகவில் இணைவார் என்று சொல்கிறார்கள்.


இதுகுறித்து செய்தியாளர்கள் நேற்று சாம்பாய் சோரனிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. எனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது. நான் இப்போது எங்கிருக்கிறேனோ அங்குதான் இருக்கிறேன்.. எங்கும் தாவவில்லை என்று கூறியிருந்தார் சாம்பாய் சோரன். இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போதும் கூட, நான் தனிப்பட்ட வேலைகளுக்காகவே டெல்லி வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.