வெற்றியைப் பார்த்து.. 19 வருஷமாச்சு.. ஈரோடு கிழக்கில் மீண்டும் உதயமாவாரா ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன்?

Su.tha Arivalagan
Jan 24, 2023,11:36 AM IST
சென்னை: சட்டசபை மற்றும் நாடாளுமன்றம் என நாட்டின் இரு பெரும் சபைகளிலும் சிறப்பான செயலாற்றிய அனுபவம் கொண்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஒரு தேர்தல் வெற்றியைப் பெற்று 19 வருடங்களாகின்றன. ஈரோடு கிழக்கு அவருக்கு மீண்டும் அரசியலில் புதிய உதயத்தைத் தருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். பெரியார் ஈ.வே. ராமசாமியின் தம்பி கிருஷ்ணசாமியின் பேரன்தான் இளங்கோவன். ஈரோடு பகுதியில் பெரியார் குடும்பத்திற்கு என்று மக்களிடையே தனி இடம் உண்டு. அவர்களுக்கு அங்கு தனி மரியாதையும், செல்வாக்கும் உண்டு.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில்  இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா நின்றபோது எங்க வீட்டுப் பிள்ளை என்று மக்கள் அவரைக் கொண்டாடி வெற்றியையும் கொடுத்து சட்டசபைக்கு அனுப்பி வைத்தனர். அப்படிப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இளங்கோவனே நிற்பதால், நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என்று இப்போதே தொகுதிக்குள் பேச ஆரம்பித்து விட்டனர்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தேர்தல் அரசியல் சத்தியமங்கலத்தில் தொடங்கியது. 1984ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார். அதன் பின்னர் அவர் தேசிய அரசியலுக்குத் திரும்பினார். 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். அப்படியே மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்று ஜவுளித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.

ஆனால் அதன் பின்னர் இளங்கோவனுக்கு தேர்தல் அரசியல் வெற்றியைத் தரவில்லை. 2009ம் ஆண்டு  லோக்சபா தேர்தலில்ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தொடர்ந்து நடந்த 2014 லோக்சபாத தேர்தலில் திருப்பூரில் போட்டியிட்டு தோற்றார். 2019ம் ஆண்டு தேர்தலில் தேனி தொகுதியில் நின்று, ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ஆர். ரவீந்திரநாத்திடம் மயிரிழையில் தோற்றார். அந்தத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியினர் வெல்ல, இளங்கோவன் மட்டும் தோல்வியைத் தழுவினார்.

இளங்கோவன் தேர்தல் வெற்றியைப் பெற்று 19 வருடங்களாகின்றன. எனவ ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் பெறும் வெற்றியானது, அவரது அரசியல் வாழ்க்கையின் புதிய திருப்பமாகவும் அமையும் என்பதால் இளங்கோவன் குடும்பத்திற்கு இந்த வெற்றி முக்கியமானதாகியுள்ளது. ஈரோடு கிழக்கு.. இளங்கோவனின் அரசியலுக்கு மீண்டும் ஒரு உதயத்தைத் தருமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.