"நம்மை நோக்கித்தான் வருது".. டிச 3 ஆம் தேதி உருவாகும் புயல்.. சென்னை அருகே கரையை கடக்குமா?

Su.tha Arivalagan
Nov 30, 2023,03:01 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: டிசம்பர் 3ஆம் தேதி  உருவாகும் புயல்  வட தமிழகம் நோக்கி வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனேகமாக அது சென்னை அருகே  கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று  சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது வானிலை மையம். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இந்நிலையில் வங்க கடலில் புயல் 2ஆம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி புயல் உருவாக கூடும். மேலும் வங்கக்கடலில் உருவான இந்த புயல் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும். பின்னர்  டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும்.




வங்கக்கடலில் உருவாகும் மிச்சாங் புயல் சென்னை அருகே  கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் நகரும் வரைபடத்தை பார்க்கும் போது சென்னை அருகே கரையை கடப்பது போல காட்டுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் ,சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம் . தென் கிழக்கு வங்கு கடலில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். இதனால் இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை மீனவர்கள் யாருக்கும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.


சரி புயல் வர்றது வரட்டும்.. நம்மை நோக்கி வரப் போகும் புயலுக்கு டெடிகேட் பண்ண ஒரு பாட்டு சொல்லுங்களேன்!