க்ரீன்விச் நேரத்தை உஜ்ஜைனிக்கு மாற்றுவோம்...ம.பி., முதல்வர் சபதம்

Aadmika
Dec 24, 2023,11:19 AM IST
போபால் : மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மோகன் யாதவ், உலகின் நிலையான நேரம் கணக்கிடப்படுவது இங்கிலாந்தின் க்ரீன்விச்சில் இருந்து மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியாக மாற்ற தன்னுடைய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் மற்றும் முக்கிய நகரங்களின் நேரம் என்பது இங்கிலாந்தின் க்ரீன்விச் நகரின் நேரத்தை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகின்றன. இதையே ஜிஎம்டி (GMT)க்ரீன்விச் நேரம் என குறிப்பிடுறோம். க்ரீன்விச் நேரமே சர்வதேச நேரமாக கணக்கிடும் முறை 300 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா சார்பில் முடிவு செய்யப்பட்டது. முதலில் பாரீஸ் நகரத்தை மையமாக கொண்டு கணக்கிடப்பட்ட நேரம் பிறகு இங்கிலாந்திற்கு மாற்றப்பட்டது. 

மற்ற நாடுகளின் நேரங்கள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அடிப்படையாக துவங்குகிறது. ஆனால் லண்டனின் க்ரீன்விச் நகரமானது நடுஇரவிலேயே துவங்கி விடுகிறது.  இந்த சமயத்தில் யாரும் தங்களின் வேலையை துவக்குவது கிடையாது. பிரைம் மெரிடியன் நேரமாக க்ரீன்விச் 1884 ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.  ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் உஜ்ஜைனி நகரத்தை அடிப்படையாக வைத்தே உலகின் நேரத்தை இந்திய ஜோதிட மற்றும் பழங்கால கணிதவியல் முறை கணக்கிட்டது. 



இந்துக்களின் நம்பிக்கையின் படி உஜ்ஜைனி நகரம் கால பைரவர் குடிகொண்டிருக்கும் இடமாகும். இந்த கோவிலே உலகின் நேரத்தை நிர்ணயிக்கும் ஆதாரமாக விளங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த கருத்தை மனதில் வைத்தே மத்திய பிரதேச முதல்வர், சர்வதேச நேரத்தை உஜ்ஜைனியை அடிப்படையாக வைத்து கணக்கிடும் முறையை மீண்டும் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு புதிய வரைபடத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்த மோகன் யாதவ், தற்போது சர்வதேச நேரத்தையே மத்திய பிரதேசத்தை அடிப்படையாக வைத்து முடிவு செய்யும் முறையாக மாற்றப் போவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து ஒரு புறம் விமர்சனத்தையும், மறுபுறம் பாராட்டையும் பெற்று வருகிறது.