அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்குமா?.. பரபரப்பு ஆலோசனையில் அண்ணாமலை!

Su.tha Arivalagan
Sep 20, 2023,05:03 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: அதிமுக  பாஜக கூட்டணி என்னாகும்.. சேர்ந்தே இருப்பார்களா அல்லது நிஜமாகவே பிரிந்து போய் விடுவார்களா என்ற பரபரப்புக்கு மத்தியில் மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை இன்று காலை முதல் தொடர்ந்து ஆலோசனை நடத்தியுள்ளார்.


பாஜகவின் மூத்த தலைவர்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எச் .ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நேரிலும் அண்ணாமலை ஆலோசனை செய்துள்ளார். அந்த ஆலோசனையின்போது தனது நிலைப்பாடு குறித்து விளக்கிய அவர், தலைவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.




அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று ஜெயக்குமார் கூறி விட்டார். ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எதுவும் பேசவில்லை. அமைதியாக இருக்கிறார். மேலும் அதிமுகவினர், பாஜக குறித்தோ கூட்டணி குறித்தோ பேசக் கூடாது என்று அதிமுக தலைமை தடை போட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியானது. அதை அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் மறுத்து விட்டார்.




இந்த நிலையில்தான் அண்ணாமலை தீவிர ஆலோசனையில் குதித்துள்ளார். பாஜக மேலிடமும் கூட அதிமுகவுடனான குழப்பம் குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அனேகமாக இதுகுறித்து பாஜக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள்தான் தற்போது தீவிரமடைந்துள்ளன. அதிமுக தரப்பு வெகுவாக கொந்தளித்து நிற்கிறது. இந்த விவகாரம் வழக்கம்  போல புஸ் ஆகுமா அல்லது வெடித்துச் சிதறுமா என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரிய வரும்.