தனித்துப் போட்டி.. யாருக்கு "தில்"லிருக்கு?.. இறங்கித்தான் பார்க்கலாமே!

admin
Jan 02, 2023,10:01 AM IST

சென்னை: தனித்துப் போட்டி என்ற கோஷம் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மக்களும் இதுகுறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர்.

தமிழகம் மட்டும் அல்லாமல், தேசிய  அளவில் ஒரு காலத்தில் கூட்டணிகளுக்குப் பெரிய முக்கியத்துவம் இருக்காது. காங்கிரஸ் கட்சி தனித்து தேசிய அளவில் 400 எம்.பிக்கள் வரை வைத்திருந்த காலமும் உண்டு. அதேபோல மாநிலங்களில் காங்கிரஸோ அல்லது பிராந்திய கட்சிகளோ பாரம்பரியாக தனித்துப் போட்டியிட்டு பெருமளவில் வெற்றிகளைக் குவித்த காலமும் உண்டு.



ஆனால்  பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த டிரெண்ட் மாறிப் போனது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மட்டுமே நினைத்தது நடக்கும் என்ற நிலை உருவாகி விட்டது.  தேசிய அளவில் காங்கிரஸ் பொற்காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது, வி.பி.சிங்கின் காலத்தில்தான். அன்று தொடங்கிய கூட்டணி ஆட்சி இன்று வரை நீடிக்கிறது.

தமிழகத்திலும் கூட  திமுகவும் சரி, அதிமுகவும் சரி வலுவான கூட்டணிகளை அமைத்துத்தான் வெற்றிகளை அள்ளியுள்ளன. ஆட்சியையும் கைப்பற்றியுள்ளன. மிக மிக அரிதாக ஜெயலலிதா தலைமையில் ஒரு முறை கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டது. ஆனால் திமுக இந்த ரிஸ்க்கை எடுக்க தயாராக இருந்ததில்லை.

திமுக, அதிமுக என்ற இரு இமயங்களைத் தகர்க்க அவ்வப்போது ஏதாவது ஒரு சக்தி வந்து கொண்டேதான் உள்ளது. மதிமுக பிறந்தது.. ஆனால் முடியவில்லை. தேமுதிக வந்தது.. எதிர்க்கட்சியாக உயர்ந்தது மட்டுமே அதன் சாதனை.. இன்று அது தேய்ந்து போய் விட்டது. பின்னர் சீமான் வந்தார். பெரிய அளவில் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. இப்போது  பாஜக வந்து திமுகவின் பொறுமையை பதம் பார்த்துக் கொண்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தனித்துப் போட்டி என்பதில்தான் நம்பிக்கையோடு இருந்தார். அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தார். ஆனால் பின்னர் அவரே கூட்டணி அரசியலுக்கு மாறி விட்டார். அதன் பின்னர் சீமான், தனித்துப் போட்டியிடுமாறு கட்சிகளை அழைத்து வருகிறார்.

சமீபத்தில் திமுக நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு இடத்தைக் கூட வெல்லமுடியாது என்று கூறியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பதிலுக்கு திமுகவுக்கு சவால் விட்டுள்ளார். திமுக தனித்துப் போட்டியிட்டும் பார்க்கலாம் என்று அந்த சவாலில் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தமிழக அரசியலைப் பொறுத்தவரை திமுகவும் சரி, அதிமுகவும் சரி பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பதில்லை. அதேசமயம், அவர்களுக்கென்று தனியாக, வலுவான வாக்கு வங்கி இருப்பதால் அவர்களுடன் கூட்டணி அமைக்கவே பல கட்சிகளும் முட்டி மோதும், ஆர்வம் காட்டும். எனவே அவர்களின் துணையுடன் தாங்கள் நினைத்ததை சாதிக்கவே இந்த இரு கட்சிகளும் முயலுமே தவிர தனித்துப் போட்டியிட இவர்களும் முன்வருவதில்லை. இந்த நிலையில் அண்ணாமலை விடுத்துள்ள சவாலுக்கு திமுகவின் பதில் என்னவாக இருக்கும் என்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதெல்லாம் இருக்கட்டும்.. எல்லாக் கட்சிகளும் ஒருமுறை தனித்துத்தான் ���ோட்டியிட்டுப் பார்க்கட்டுமே.. மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதையும் பார்த்து விடலாமே!