"என்னாது.. சமையலுக்கு தக்காளி யூஸ் பண்ணீங்களா".. கோச்சுக்கிட்டு போன மனைவி!

Su.tha Arivalagan
Jul 14, 2023,08:05 AM IST
போபால்: மத்தியப் பிரதேசத்தில்  ஒருவர் தக்காளியை பயன்படுத்தி சமையல் செய்துள்ளார். இதைக் கேட்டு கோபமடைந்த அவரது மனைவி, தக்காளி விற்கும் விலைக்கு அதைப் போட்டு ஏன் சமையல் செய்தீர்கள் என்று சண்டை போட்டு வீட்டை விட்டு போய் விட்டாராம்.

எனது மனைவியை கண்டுபிடித்து தாங்க என்று கூறி அந்த கணவர் தற்போது போலீஸாரை அணுகியுள்ளார். தக்காளி விலை உயர்வு எந்த அளவுக்கு மக்களைப் பாதித்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் பர்மன். இவர் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். இவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தனது மனைவி ஆர்த்தி பர்மனைக் காணவில்லை என்று கூறி புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொடுத்த புகார் மனுவில், எனது மகளுடன் பஸ் ஏறிப் போய் விட்டார் ஆர்த்தி பர்மன். அவரை கடந்த 3 நாட்களாக நான் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறியுள்ளார். சம்பவத்தன்று  சந்தீப் பர்மன் தனது உணவகத்தில் தக்காளியைப் பயன்படுத்தி ஏதோ டிஷ் செய்துள்ளாராம். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, தக்காளி விற்கிற விலைக்கு இதை ஏன் செய்தீர்கள் என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இந்த சண்டை முற்றி கடும் வாக்குவாதம் ஆகி அதில்தான் கோபித்துக் கொண்டு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாராம். தற்போது அவர் உமைரியா என்ற இடத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்குப் போயுள்ளது தெரிய வந்துள்ளது. அவரை சமாதானப்படுத்தி கூட்டி வரும் முயற்சிகளை போலீஸார் மேற்கொண்டனர். கணவன், மனைவியை போன் மூலம் பேச வைத்தனர்.

ஒரு தக்காளிக்கு இவ்வளவு அக்கப்போரா!