எட்டே மாதத்தில் துருப்பிடித்துப் போன நட்டு, போல்டு.. சிவாஜி சிலை உடைந்து நொறுங்கியதன் பின்னணி!

Su.tha Arivalagan
Aug 27, 2024,06:50 PM IST

மும்பை:  மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் நகரில் வைக்கப்பட்ட பிரமாண்ட சிவாஜி சிலை, நிறுவப்பட்ட எட்டே மாதத்தில் கீழே விழுந்து உடைந்து நொறுங்கிய சம்பவத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


மராத்திய மன்னர்களில் முக்கியமானவர் சத்ரபதி சிவாஜி. இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் நகரில் பிரமாண்ட வெண்கலச் சிலை வைக்கப்பட்டது. இந்த நிலையை 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கடற்படை சார்பில் இந்த சிலை வைக்கப்பட்டது. சிலை வைப்பதில் அனுபவம் இல்லாத கடற்படையிடம் சிலை வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டபோதே அதுகுறித்து பலரும் முனுமுனுத்தனர். இருப்பினும் கடற்படையே சிலையை வைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. இறுதியாக, ராஜ்கோட் கோட்டை வளாகத்தில் இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி  கடந்த டிசம்பர் 4ம் தேதி திறந்து வைத்தார்.




சிலை திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே அதுகுறித்து பலரும் கவலை தெரிவிக்க ஆரம்பித்தனர். காரணம், சிலை ஸ்திரமாக இல்லை என்பது பலரின் புகாராக இருந்தது. மகாராஷ்டிர மாநிலம் மால்வான் கோட்ட பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் அலுவலகமும் கூட இதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில், சிலையின் நட்டு போல்டுகள் துருப்பிடித்து வருகின்றன. இதனால் சிலையின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் எந்த எச்சரிக்கையும் யாராலும் பொருட்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது.


இந்த நிலையில்தான் சமீபத்தில் பெய்த கன மழை மற்றும் பலத்த காற்றில் சிலை விழுந்து பல துண்டுகளாக நொறுங்கிப் போய் விட்டது. இந்த சம்பவம் மகாராஷ்டிர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிலை வைப்பதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சிலை காண்டிராக்டர் ஜெயதீப் ஆப்தே, சிலை ஆலோசகர் சேட்டன் பாட்டீல் ஆகியோர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.


நட்டு போல்டுகள் துருப்பிடித்துப் போனதன் காரணமாகவே சிலை விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மேலும் இந்த  சிலையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுகளும் கூட துருப்பிடித்துப் போயுள்ளனவாம்.  சிலையை வைத்து எட்டே மாதத்தில் நட்டு போல்ட்டெல்லாம் துருப்பிடிக்கிறது என்றால் தரக்குறைவான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்