"14+1"..  மாத்தி மாத்திப் பேசும் பிரேமலதா.. அத்தனை பலம் தேமுதிக.வுக்கு இருக்கா.. ரியல் பிளான் என்ன?

Aadmika
Feb 13, 2024,08:41 PM IST

சென்னை : 14 லோக்சபா, ஒரு ராஜ்ய சபா சீட் தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இதை தான் கேட்கவில்லை என்று அவர் மறுத்தாலும் கூட.. அதிக சீட்களை தேமுதிக எதிர்பார்ப்பது என்பது என்னவோ உண்மைதான்.


கடந்த வாரம் நடந்த மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, இது தான் தங்களின் முடிவு என திட்டவட்டமாக சொன்னார். ஆனால் நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் கேட்ட போது, "14+1 என நான் கூறவில்லை. மாவட்ட செயலாளர்களின் விருப்பம். இன்னும் நாங்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அடுத்த கட்டமாக மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு எடுக்கும் முடிவே இறுதியான முடிவு" என்றார்.


இது நியாயமான கோரிக்கையா?




14 லோக்சபா சீட், ஒரு ராஜ்யசபா சீட் என பிரேமலதா கேட்பது சரி தானா? தேமுதிக.,விற்கு அந்த அளவிற்கு பலம் உள்ளதா? எந்த அடிப்படையில் இத்தனை சீட்கள் வேண்டும் என பிரேமலதா துணிச்சலாக கேட்கிறார்? இவங்க கட்சியோட பிளான் தான் என்ன? தேமுதிக.,வின் கள நிலவரம், ஓட்டு வங்கி எப்படி உள்ளது. விஜயகாந்த் இல்லை...தொண்டர்கள் இன்னும் குழப்பமான மனநிலையிலேயே இருந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் பிரேமலதா இப்படி கேட்பது சரி தானா? என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ளனர். வாங்க கொஞ்சம் அலசி பார்க்கலாம்.


தேமுதிக.,வின் தேர்தல் பாதைகளை கொஞ்சம் திரும்பி பார்த்தால் இன்று பிரேமலதா ஒன்றும் புதிதாக கேட்டு விடவில்லை. அன்று விஜயகாந்த் கேட்டதை தான் இன்று பிரேமலதா கூட்டணி கட்சிகளிடம் கேட்கிறார். முதலில் அதிமுக.,வுடன் கூட்டணி வைத்த போதும் சரி, பிறகு பாஜக கூட்டணியில் இணைந்த போதும் லோக்சபா சீட்களில் வேண்டுமானால் தேமுதிக முன்னே பின்னே விட்டுக் கொடுத்துள்ளதே தவிர, ராஜ்யசபா சீட் என்பதை அப்போ இருந்து, இப்போது வரை விடாபிடியாக கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அதிமுக.,வும் அதை தரவில்லை, பாஜக.,வில் அதை தரவில்லை. இருந்தாலும் கூட்டணி கட்சிகளிடம் கேட்பதை தேமுதிக.,வும் விடவில்லை. 


தேமுதிகவின் வாக்கு வங்கி




சீட் கேட்பது இருக்கட்டும். பிரேமலதா இவ்வளவு உறுதியாக சீட் கேட்கிறார் என்றால் தேமுதிக.,வின் வாக்குவங்கி எப்படி இருக்கு? தேமுதிக.,வின் தேர்தல் வரலாற்றை திருப்பி பார்த்தால் 2014ம் ஆண்டு முதலே கட்சியின் ஓட்டு வங்கி படிப்படியாக சரிந்து வருகிறது என்று தான் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளி விபரம் சொல்கிறது.


2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேமுதிக 14 இடங்களில் போட்டியிட்டு, அதில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அந்த தேர்தலில் 0.38 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. இது 2009 ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக பெற்ற ஓட்டுக்களை விட 0.37 சதவீதம் குறைவு. இதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தேமுதி 4 தொகுதிகளில் போட்டியிட்டு, அதிலும் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இதில் தேமுதிக 0.15 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. இதில் தேமுதிக.,வின் ஓட்டு வங்கி மேலும் 0.23 சதவீதம் சரிந்தது.


லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் தேமுதிக.,வின் நிலை இறங்கு முகமாகவே உள்ளது. 2016ம் ஆண்டு தமிழக சட்டசைப தேர்தலில் 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒன்றில் கூட வெற்றி பெறாததுடன் அதன் ஓட்டு வங்கியும் 7.88 சதவீதத்தில் இருந்து 2.39 சதவீதமாக குறைந்தது.


2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்ட போதும் ஒன்றில் கூட வெற்றி பெறாத தேமுதிக.,வின் ஓட்டு வங்கி 0.43 சதவீதமாக சரிந்தது. இப்படி லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் என இரண்டிலுமே தேமுதிக.,வின் ஓட்டு வங்கி தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. 


இறங்கி வந்தால் எதிர்காலத்துக்கு நல்லது




இப்போது கட்சி இருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகளிடம் கறார் காட்டாமல் கொஞ்சம் இறங்கி வந்தால் அது கட்சியின் எதிர்காலத்திற்கு சாதகமாக இருக்கும் என கட்சி வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.  கேப்டனும் இப்போது இல்லை. கட்சியின் வாக்கு வங்கியும் பெரிதாக இல்லை. அனுதாப வாக்குகள்தான் இப்போது கிடைக்கும். அதேசமயம், அது எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் உறுதியாக சொல்லல முடியாது.


கூட்டணி பேச்சுவார்த்தையின் போது கட்சியின் எதிர்காலத்தை மனதில் வைத்து, பலமான கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாவிட்டாலும் ஓட்டு வங்கியை உயர்த்தினால் அது வருகிற சட்டசபை தேர்தலிலும் கட்சிக்கு கைகொடுக்கும் என்றே கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்கள். 


பிரேமலதாவின் கறார் பேச்சு, கட்சிக்கு வருகிற அனுதாப ஓட்டுக்களை கூட வர விடாமல் செய்து விடுமோ என கட்சி தொண்டர்கள் சிலரே கவலை தெரிவித்து வருகின்றனர்.