"உலகத்திலேயே சிறந்த நண்பன்.. சித்திக்".. கண்ணீர் விடும் லால்!

Aadmika
Aug 09, 2023,12:24 PM IST

திருவனந்தபுரம் : சித்திக் என்னோட பிரண்ட் மட்டும் கிடையாது, என்னோட பெஸ்ட் பிரண்ட். உலகிலேயே மிகச் சிறந்த நண்பர்கள் யார்னு கேட்டா சித்திக் - லால்னுதான் நான் சொல்வேன்.. போய்ட்டான்.. என்று கண்ணீர் வடித்துள்ளார் நடிகரும், இயக்குநருமான லால்.


மலையாளத் திரையுலகில் லால்  - சித்திக் என்ற பெயர் மறக்க முடியாதது. பல சூப்பர் ஹிட் படைப்புகளைக் கொடுத்தவர்கள் இந்த இருவரும். லால் நடிப்பின் பக்கம் போன பிறகு சித்திக்கும் சில படங்களில் நடித்துள்ளார். இருவரும்  இணைந்து கொடுத்த படைப்புகள் காலத்திற்கும் நின்று பேசப்படுபவையாகும்.


1983 ம் ஆண்டு தனது நண்பர் லாலுடன் இணைந்து அசிஸ்டென்ட் டைரக்டராக மலையாள சினிமா உலகிற்குள் நுழைந்தவர் சித்திக். இவர்கள் இருவரும் இணைந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல காமெடி  படங்களை வழங்கி உள்ளனர். தமிழில் விஜய் நடித்த ஃபிரண்ட்ஸ், காவலன் ஆகிய படங்களை இயக்கியவர் சித்திக் தான். மலையாளத்தில் மோகன்லால் நடித்த காட் ஃபாதர் படத்தை இயக்கியதும் இவர் தான். இந்த படங்கள் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று வந்தன.


சித்திக்கும், லாலும், 1999ம் ஆண்டு தனித்துப் பிரிந்தனர்.. மோதல் ஏற்பட்டோ அல்லது சண்டை போட்டுக் கொண்டோ பிரியவில்லை.. ரஜினிகாந்த் கமல்ஹாசன் எப்படி மியூச்சுவலாக பிரிந்தனரோ அது போல பிரிந்தனர். பிரிந்த பிறகும் இவர்கள் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர்.


சித்திக் குறித்து லால் கூறும்போது, நான் ஒரு நண்பனை இழக்கவில்லை.. பெஸ்ட் நண்பனை இழந்துள்ளேன். யார் உலகிலேயே சிறந்த நண்பர்கள்னு கேட்டா எங்களைத்தான் நான் சொல்வேன்.  எனக்கு 16 வயது இருக்கும்போது அவனுடன் நட்பு ஏற்பட்டது.  அப்போதிருந்தே அவனும், நானும் இணை பிரியாமல் இருந்து வந்தோம்.  முதலில்இருவரும் சேர்ந்து மிமிக்ரிதான் செய்தோம். பிறகு கதை எழுதினோம்.  பிறகு கோ டைரக்டராக, இயக்குநராக மாறினோம். திரைப்படங்களைத் தயாரித்தோம், விநியோகித்தோம்.


கல்யாணம் செய்தோம், வாழ்க்கை மாறியது, எல்லாம் மாறியது.. ஆனால் எங்களோட நட்பின் நிறம் மட்டும் மாறவே இல்லை.  அப்படியேதான் தூய்மையாக இருந்தது.  எல்லா நண்பர்கள் போலவே எங்களுக்குள்ளும் சண்டை வரும். வாக்குவாதம் வரும். ஆனால் தனிப்பட்ட முறையில் அது இருந்ததில்லை. கதைக்காகத்தான் அடிச்சுக்குவோம். ஆனாலும் எவன் தப்பு செய்தாலும் அதை உணர்ந்து வந்து மன்னிப்பு கேட்டு விடுவோம்.




எங்களுக்குள் ஈகோ இருந்ததில்லை. எதையும் வெளிப்படையாக பேசுவோம், ஏற்றுக் கொள்வோம். இணைந்து சிரித்தோம்.. கை கோர்த்து நடந்தோம்..  நாங்கள் திரைப்படத்துறையில் பிரிந்தபோது கூட பலரும் கேள்விகள் கேட்டனர்.. எங்க சொந்தக்காரர்களே கூட ஏதோ நடந்துருச்சு போல என்று சந்தேகப்பட்டனர். ஆனால் அப்படி எதுவுமே நடக்கலை என்பதுதான் உண்மை.  எங்களது பெயர்தான்  சித்திக் - லால் என்பது, லாலும், சித்திக்கும் என்று மாறியது. கேரளாவில் பலரும் எங்களை ஒரே பெயராகத்தான் நினைத்தார்கள்.  எனது சிறந்த நண்பனுக்கு கண்ணீர் மல்க விடை கொடுக்கிறேன் என்று கூறினார் லால்.


சித்திக்கிற்கு ஷஜிதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். சித்திக்கின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 6 மணிக்கு எர்ணாகுளத்தில் உள்ள மத்திய ஜூம்மா மசூதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை சித்திக்கின் உடல் பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடவந்திராவில் உள்ள ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் வைக்கப்பட உள்ளது.


சித்திக்கின் மறைவிற்கு மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட மலையாள திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியா வழியாக இரங்கல் தெரிவித்து, தங்களின் அதிர்ச்சி கலந்த வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.