அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய.. சூப்பரான ஹாட் ஸ்பாட்.. நிகாரகுவா!

Su.tha Arivalagan
Dec 26, 2023,06:30 PM IST

பாரீஸ்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்வோர் அதிகம் பயன்படுத்தும் நாடுகள் வரிசையில் மெக்சிகோவுக்கு அடுத்து நிகாரகுவா உள்ளது. இதனால்தான் பிரெஞ்சு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்தை பிரெஞ்சு அதிகாரிகள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.


பிரெஞ்சு விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானத்தில் பயணித்தவர்களில் 27 பேர் மட்டும் இந்தியா திரும்ப விரும்பவில்லை என்று கூறி விட்டனர். அவர்கள் பிரான்சில் தஞ்சம் புக அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


துபாயிலிருந்து 303 பேருடன் ஒரு தனியார் வாடகை விமானம் நிகரகுவா நாட்டுக்குப் புறப்பட்டது. வழியில் பிரான்சில் பெட்ரோல் நிரப்ப தரையிறங்கியது. இந்த நிலையில் இதில் ஆட்கள் கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து பிரெஞ்சு அதிகாரிகள் அந்த விமானத்தைத் தடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர் விமானம் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.




இருப்பினும் 27 பயணிகள் தாங்கள் பயணத்தைத் தொடர விரும்பவில்லை என்றும் பிரான்ஸில் தங்க தங்களுக்கு புகலிடம் தேவை என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக உரிய முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்திய அதிகாரிகள் அந்த 27 பேரைத் தவிர மற்றவர்களுடன் விமானம் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தனர்.


இந்த 27 பேரும் இந்தியர்களா அல்லது வேறு நாட்டவர்களா என்று தெரியவில்லை. அதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இவர்கள் ஏன் புகலிடம் கோரியுள்ளனர் என்றும் தெரியவில்லை. 27 பேரில் 5 பேர் மைனர் வயதுடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது. புகலிடம் கோரி தஞ்சம் புகுவோரை சர்வதேச சட்டப்படி அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்ப கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட விமானம் ரொமானியாவின் லெஞன்ட் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமானதாகும். 


நிகாரகுவா செல்வது ஏன்?




நிகாரகுவா நாடு வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றாகும். மெக்சிகோவுக்கு அருகே உள்ளது. அமெரிக்காவுக்கு வெகு அருகே உள்ள ஒரு நாடு. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்வோர் அதிக அளவில் நிகாரகுவா வழியாக்ததான் நுழைவார்கள். எப்படி மெக்சிகோ வழியாக பலர் அமெரிக்காவுக்குள் ஊடுறுகிறார்களோ அதேபோல நிகாரகுவா மூலமாகவும் பலர் உள்ளே செல்கின்றனர்.


பெருமளவிலான இந்தியர்களும் இப்படி நிகராகுவா வழியாக அமெரிக்காவுக்குள் செல்வதாக தகவல்கள் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 97,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இப்படி அமெரிக்காவுக்குள் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டை 51.61 சதவீதம் அதிகமாகும். இவர்களில் மெக்சிகோ எல்லை வழியாக 41,770 இந்தியர்கள்  ஊடுறுவ முயன்றனர் என்று அமெரிக்க புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரான்சில் தடுக்கப்பட்ட விமானமும் கூட நிகராகுவா செல்வதற்காக வந்தது என்பதாலும், ஒரே நாட்டைச் சேர்ந்த பலர் பெருமளவில் இருந்ததாலும்தான் அதிகாரிகள் சந்தேகப்பட்டு விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.


சர்வதேச நாடுகளின் விமானங்கள், நிகாரகுவா நாட்டுக்குள் நுழைய எளிதாக அனுமதி கிடைத்து விடும் என்பதால்தான் பலரும் நிகாரகுவா மூலமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.