ஒரு சவரன் ரூ. 52,000.. இப்படியே போய்ட்டிருந்தா எப்படிய்யா.. இதுக்கு ஒரு என்ட் கார்டே இல்லையா??!

Su.tha Arivalagan
Apr 03, 2024,12:10 PM IST

சென்னை:  தங்கம் விலை வரலாறு காணாத விலையில் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ 52, 000 ஆக எகிறியுள்ளது.  காலங்கார்த்தாலே இப்படி ஒரு அதிர்ச்சியா என்று மக்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள்  தங்கம் விலை ஏற்றத்தைப் பார்த்து அயர்ச்சியாகியுள்ளனர். 


தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு நாள் குறையும்.. பல நாள் உயரும். இது இப்படித்தான் பாஸு என்று மக்களும் கேஷுவலாகதான் இருந்தனர். ஆனால் இப்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 52,000 என்று வந்து நிற்பதைப் பார்த்து என்னங்கடா இது என்று அரண்டு போயுள்ளனர்.


சரி தங்கம் விலை எப்படி உயருது.. ஏன் உயர்த்துகிறார்கள்.. எந்த அடிப்படையில் உயர்த்துகிறார்கள்னு தெரியுமா.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.




நமது  நாட்டில் நகை செய்யப் பயன்படுத்தப்படும் தங்கம் பெரும்பாலும் இறக்குமதி தங்கம்தான். இப்படி இறக்குமதி செய்யப்படும் தங்கம் "பியூர் பிஸ்கட்"டாக வரும். அதாவது தங்க பிஸ்கட் என்று சொல்வோமே, அது போல பாளம் பாளமாக வரும். அந்த தங்கம் வங்கிகள் மூலமாக இடைத் தரகர்களுக்குப் போய் அங்கிருந்து நகை தயாரிப்பாளர்களை அடைகிறது. அவர்கள்தான் ஆபரணங்களை உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். 


இறக்குமதியாகி வரும் தங்கம் சுத்த தங்கமாக இருக்கும்.. அதாவது 24 கேரட் தங்கமாக இருக்கும். நகை செய்யும்போது சிறிதளவு செம்பு சேர்க்க வேண்டும். அப்படி செம்பு சேர்த்து  91.6  22kt தங்க நகைகளாக கடையில் விற்கப்படுகிறது. கடைகளில் விற்கப்படும் நகைகள் 22 கேரட் தங்கத்தால் ஆனதாகும். இது இந்திய அரசால் வழங்கப்பட்ட BIS Hall mark முத்திரையுடன்   நகை கடைகளில் நாம் அணியும் நகைகளில் இடம் பெற்றிருக்கும். 


இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் கையிருப்பு 757 டன் ஆகும். அரசிற்கு இது மிகப் பெரிய மூலதனம் ஆகும். எனவேதான் இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது. 


சரி தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்பவர்கள் யார்? 


இந்தக் கேள்வி பெரும்பன்மையானவர்களுக்கு எழும்.. குறிப்பாக விலை உயரும்போதெல்லாம் இதுவும் "வோடோபோன் நாய்க்குட்டி" மாதிரி பின்னாடியே வரும். தங்கம் எங்கு  அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறதோ மற்றும் பொருளாதார வலிமை இருக்கும் நாடுகள் தான் தங்கத்தின் வணிகரீதியான விலையை நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் உலக வர்த்தக ரீதியான தங்கம் விலையை நிர்ணயம் செய்வது லண்டன் பங்கு சந்தை நிறுவனங்கள்தான். இவர்கள் தான்  உலக பங்கு சந்தை மதிப்பை வைத்து தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.


விலை உயர காரணம் என்ன? 


சமீபகாலமாக அமெரிக்காவில் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. அங்குள்ள வங்கியில் யாரும் தங்கத்தின் மீதான வர்த்தக ரீதியில் தொழிலில் முதலீடு செய்யவில்லை. இதனால் தான் தங்கம் நாளுக்கு நாள் விலை உயர்வை சந்திக்கிறது. மேலும் தங்கத்தின் பயன்பாடு உயர்ந்தாலும் கூட விலையும் கூடவே உயரும்.


கட்டுரை: சுஜித்ரா