விஜய் ஏன் இந்த முடிவெடுத்தாரு?.. தமிழ் சினிமாவுக்கு பெரிய நஷ்டம்.. திருப்பூர் சுப்ரமணியன்

Meenakshi
Feb 02, 2024,05:04 PM IST
திருப்பூர்: நடிகர் விஜய் ஏன் சினிமாவை விட்டு விலகும்  முடிவெடுத்தாரு.. தமிழ் சினிமாவுக்கு இது பெரிய நஷ்டம் என தியேட்டர் உரிமையாளரும், தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய். இன்று  அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். முழுநேர அரசியலில் இறங்க உள்ளதால் சினிமாவை விட்டு இன்னும் 2 ஆண்டுகளில் விலக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல திரைத்துறையினரையும் கவலை அடையச் செய்துள்ளது.

இது குறித்து தியேட்டர் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த  திருப்பூர் சுப்ரமணியன் கூறுகையில், விஜய் சினிமா விட்டு விலகுவது உண்மையிலேயே எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு பெரிய நடிகர். கலெக்சன் கிங்குனு கூட சொல்லலாம். அவர் திரைப்படத்திலிருந்து விலகுவது என்பது திரைப்படத்துறையை சேர்ந்த எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் தான்.



அவருடைய முடிவை பொருத்தவரையில் நாம் தலையிடமுடியாது. இருந்தாலும் எங்களுடைய வாழ்த்துக்கள் அவ்வளவு தான். எம்ஜிஆர் பீக்கல இருக்குறப்பா தான் அரசியலுக்கு வந்தாரு. விஜயகாந்தும் பீக்குல இருக்குறப்ப தான் அரசியலுக்கு வந்தாங்க. அப்படி  இருக்கும் போது, டவுன் அப்ப எல்லாம் கிடையாது. அவங்க அவங்க மனநிலைய பொறுத்தது. அவரு அரசியலுக்கு வரணும்னு நினைச்சாரு வந்துட்டாரு. 

கடந்த 6,7 மாதமாக அவரு அரசியலுக்கு வர்றாரு வர்றாருன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க இப்ப வந்துட்டாரு. அரசியலுக்கு வந்ததுக்கு அப்பறமும் சினிமாவில நடிக்கலாம். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்ததுக்கு அப்பறம் 5 வருசம் சினிமாவில் நடிச்சாரு. எம்ஜிஆர் அரசியலில் இருக்கும் போது தான் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி என மெகாஹி படங்களில் நடித்தார். 

விஜய் ஏன் இந்த முடிவை எடுத்தாருனு தெரியலை, அரசியல்ல இருக்கும் போது படத்துல நடிக்கலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை என்றார் திருப்பூர் சுப்பிரமணியன்.