உக்ரைன் போரையே நிறுத்துறீங்க.. இது முடியாதா?... பிரதமர் மோடியை சீண்டிய ராகுல் காந்தி

Aadmika
Jun 20, 2024,04:58 PM IST
டில்லி : நீட் தேர்வு கேள்விகள் லீக் ஆனது, யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆகிய விவகாரங்கள் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றையம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மோடிஜியால் ரஷ்யா-உக்ரைன் போரையே நிறுத்த முடிகிறது. ஆனால் சில காரணங்களால் அவரால் இந்தியாவில் லீக்காகும் பேப்பர்களை நிறுத்த முடியவில்லை. அவற்றை நிறுத்தவும் அவர் விரும்பவில்லை. நீட், நெட் பேப்பர்கள் லீக்கான விஷயம், நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆகியவை குறித்து பாரத் ஜோதோ நியாய யாத்திரையின் போது ஆயிரக்கணக்கானவர்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர்.  



கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்-பாஜக.,வால் கைப்பற்றப்பட்டு விட்டன. அதனால் இவர்கள் நீக்கப்படும் வரை பேப்பர்கள் லீக் ஆவதை நிறுத்த முடியாது. வியாபாரம் மத்திய பிரதேசத்தில் மட்டும் தான் நடந்தது. தற்போது மோடி மற்றும் அவரது அரசால் நாடு முழுவதும் அது பரவி வருகிறது. துணை வேந்தர்கள் மெரிட் அடிப்படையில் நியமிக்கப்படுவது கிடையாது. ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பாஜக நம்முடைய கல்வி அமைப்பிற்குள்ளேயே ஊடுருவி அவற்றை சிதைத்து வருகிறது. 

பணமதிப்பிழப்பை வைத்து பொருளாதாரத்தில் மோடி என்ன செய்தாரோ, அதையே இப்போது கல்வி அமைப்புகளில் செய்து வருகிறார்கள். இது தொடர்புடைய குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் இன்னும் மெளனமாக இருக்கிறார். அவரது இப்போதைய முக்கியமான நோக்கம் சபாநாயகர் தேர்தல் தான். அவரது அரசு, சபாநாயகர் பதவி ஆகியவற்றை பற்றி தான் அவர் சிந்திக்கிறார். மக்களை பயத்துடனேயே வைத்து அரசை நடத்த வேண்டும் என்பது தான் பிரதமர் மோடியின் நோக்கமாக உள்ளது. 

அவரை பார்த்து இப்போது யாரும் நாட்டில் பயப்படவில்லை. நீங்கள் பார்த்தீர்களா, இல்லையா என எனக்கு தெரியாது. ஆனால் வாரணாசியில் யாரோ ஒருவர் என்னை செருப்பால் அடித்தார். தேர்தலுக்கு யாராவது என்னை அடித்திருந்தால் அது பயம் காரணமாக இருக்கலாம். இப்போது அவர்களுக்கு பயம் கிடையாது. அவர்கள் கட்சிக்குள்ளேயே பல பிரச்சனைகள் உள்ளது. இப்போது வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது. அதனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என ராகுல் காந்தி மிக கடுமையாக தாக்கி உள்ளார்.