பட்டர்ஃபிளை உங்க மேல வந்து உக்காந்துச்சா.. ஆஹா.. சூப்பர்ங்க.. அதுக்கு இதுதான் அர்த்தமாம்!

Su.tha Arivalagan
Sep 24, 2024,06:02 PM IST

சென்னை: ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படித்தான் விலங்குகளின் செயல்பாடுகள், அவை எழுப்பும் சத்தம், அவற்றின் நடமாட்டம் இவை எல்லாத்துக்குமே ஒரு காரணத்தை நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். அப்படித்தான் பட்டர்பிளை என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கும் சில பலன்களைச் சொல்லி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.


விதம் விதமான நிறங்களில் பார்க்கவே அவ்வளவு கொள்ளை அழகாக காணப்படும் பூச்சிதான் பட்டாம்பூச்சி. விதம் விதமான கலர்களில் உள்ளதால்தான் இதை வண்ணத்துப் பூச்சி என்று காரணப் பெயரில் அழைக்கிறோம். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20,000க்கும மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன. சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நூற்றுக்கணக்கான வகை பட்டாம்பூச்சிகளைப் பார்க்கலாம். 




பல ஊர்களில் பட்டாம்பூச்சிகளுக்காக பூங்காக்களே கூட வைத்துள்ளனர். பார்க்கவே மனதுக்கு ரம்மியமான உணர்வைத் தருபவை பட்டாம்பூச்சிகள்.. வெள்ளை, மஞ்சள், பல கலர்களின் காம்போ, கருப்பு என்று விதம் விதமான நிறங்களில் பட்டாம்பூச்சிகள் உள்ளன. சில நேரங்களில் பட்டாம் பூச்சிகள் நமது வீட்டுக்குள் வந்து விடும். அல்லது நம்மை நோக்கி வந்து நமது மடி மீதோ  அல்லது தலை மீதோ அமரும். இதைப் பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அதைப் பார்த்து ரசிப்போம்.. ஆனால் இது ஒரு வகையான அறிகுறி என்று நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.


பட்டாம் பூச்சிகள் நமது வீட்டுக்குள்ளோ அல்லது நமது இருப்பிடத்திற்குள்ளோ வருவது நல்ல சகுனமாம். குறிப்பாக நமது வீட்டில் நல்லது நடக்கப் போகிறது என்பதற்கான சமிக்ஞையாம் இது. அதாவது நமது முன்னோர்கள்தான் பட்டாம்பூச்சி வடிவில் வந்து தடைபட்ட காரியம் நடக்கும், சுப காரியங்கள் நடைபெறும், பண வரவு இருக்கும். நல்லது நடக்கும், உடல் நிலை மேம்படும் இப்படி எல்லாவகையான நல்லதும் நடக்கும் என்பதை உணர்த்தும் அறிகுறிதான் இது என்று சொல்கிறார்கள்.


குறிப்பாக வெள்ளை நிற பட்டாம்பூச்சி வந்தால் அவ்வளவு நல்லதாம். அதேசமயம், கருப்பு நிற வண்ணத்துப் பூச்சி மட்டும் அப சகுணமாம்.  அது வந்தால் வீட்டில் ஏதாவது கெட்டது நடக்கலாம் என்று அர்த்தமாம். 


பட்டாம்பூச்சிகள் நம்மைத் தேடி வரும்போது அதை பிடித்து வைத்துக் கொள்வதோ அல்லது அதை அடைத்து வைக்க முயல்வதோ கூடாது. மாறாக அதுவாக வந்த அதுவாக போகும் வரை அமைதியாக இருந்து விடுவதுதான் நல்லதாம். இல்லாவிட்டால் அது நமக்கு கெட்ட விஷயங்களுக்கு வித்திட்டு விடும் என்றும் சொல்கிறார்கள். அடுத்தவாட்டி உங்க கிட்ட பட்டர்பிளை வந்தா.. சமத்தா வேடிக்கை பாருங்க.. விரட்டி விடாதீங்க!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்