அண்ணாமலை ஏன் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கலை?.. இதுதான் காரணமாம்!

Su.tha Arivalagan
Apr 09, 2023,10:15 AM IST
சென்னை: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை முடிவு செய்ய அண்ணாமலை டெல்லி சென்றிருந்ததால், அவரால் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை  என்று பாஜக தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்திருந்தார். அங்கு சென்னை விமான நிலைய புதிய முனையத் தொடக்க விழா, சென்னை  - கோவை வந்தேபாரத் ரயில் தொடக்க விழா,  மதுரையில் பிரமாண்டப் பாலத் தொடக்க விழா உள்ளிட்டவற்றில் பிரதமர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால் பிரதமர் மோடி வந்த சமயம் பார்த்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இல்லை. இது சலசலப்பையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. வழக்கமாக பிரதமர் வருகிறார் என்றால் முதல் ஆளாக முன்னால் நிற்பார் அண்ணாமலை. பிரதமர் வரவேற்பிலும் சரி, பிரதமரோடு நிகழ்வுகளில் கலந்து கொள்வதிலும் சரி முனைப்பு காட்டுவார். ஆனால் நேற்று அவர் ஊரிலேயே இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியது.



ஆனால் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் அவரை அழைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியது. ஆனால் திமுக தரப்பில் அண்ணமலை பதவிக்கு ஆப்பு வருகிறது. அதனால்தான் அவரை டெல்லிக்கு அழைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் எழுதி வந்தனர்.

இந்த நிலையில் அண்ணாமலை ஏன் நேற்று சென்னையில்  இல்லை என்பது குறித்து பாஜக ஐடி விங் மாநிலத் துணைத் தலைவர் செலவக்குமார் ஒரு விளக்கம் கொடுத்து டிவீட் போட்டுள்ளார். அதில், கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை முடிவு செய்யும் பணியில் தேசிய தலைவர் ஜேபி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் டெல்லியில் அண்ணாமலையார் இருப்பதால், சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. 

தமிழகத்தில் தேசிய ஜளநாயக கூட்டணியை பாஜக சார்பில் வழிநடத்த வேண்டிய மாநில தலைவர் இங்கு இல்லாததால்  கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பை ரத்து செய்துள்ளார் பாரத பிரதமர்.
அமித் ஷா அவர்கள் மற்றும் ஜேபி. நட்டா அவர்கள் டெல்லியில் இல்லை என்று திமுகவினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். எங்க கட்சி தலைவர்கள் எங்க இருக்காங்கனு எங்களுக்கு தெரியாதா ? என்று கேட்டுள்ளார் செல்வக்குமார்.

கூடவே, அமித்ஷாவும், நட்டாவும் டெல்லியில்தான் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாக ஏஎன்ஐ வெளியிட்டிருந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில்,  ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன், டெல்லியில் அமித்ஷா, நட்டாவைச் சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட காட்சி உள்ளது.

எப்படியோ, பிரதமர் வரும் நேரத்தில் அண்ணாமலை இங்கு இல்லாமல் போனது நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி விட்டது.