தீயாாய் வேலை செய்யும் எடப்பாடி பழனிச்சாமி.. இதுவரை காட்டாத வேகத்தைக் காட்டுவதன் பின்னணி என்ன?

Su.tha Arivalagan
Apr 07, 2024,05:28 PM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சித் தலைவர்களுக்கு இரண்டு கோரிக்கைகளை மட்டும் வைத்துள்ளாராம். எந்த தொகுதியிலும் பாஜக 2வது இடத்தைப் பிடித்து விடக் கூடாது. அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் கட்டாயம் நாம் வென்றாக வேண்டும். இதை மட்டும் எப்படியாவது செஞ்சுருங்க என்று கண்டிப்பான கோரிக்கையை வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.


மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் வழக்கத்தை விட படு வேகமாக ஆவேசமாக பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் அவரது  பிரச்சார வேகமும், பேச்சும், உத்தியும் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள். இதுவரை நம்ம தலைவரை இவ்வளவு வேகமாக பாத்ததில்லையே என்று கட்சியினரே ஆச்சரியப்படுகின்றனர்.


கடுமையாக கலாய்க்கும் உதயநிதி ஸ்டாலின்




அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார். போட்டோ காட்டி கலாய்க்கிறார். வாய்க்கு வாய் பாதம் தாங்கி பழனிச்சாமி என்று சொல்கிறார். ஆனால் இந்த விமர்சனங்களை தைரியமாக எதிர்கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரும் போட்டோவைக் காட்டி பதிலுக்குப் பதில் கொடுக்கிறார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் கொடுக்கிறார்.


பாஜகவை பழனிச்சாமி விமர்சிக்காமல் இருப்பதையே ஒரு பிரச்சாரமாக திமுக மாற்றியது. இதை வைத்தே முதல்வரும், அமைச்சர் உதயநிதியும் கடுமையாக சாடி வந்தனர், கள்ளக்கூட்டணி என்று விமர்சித்தனர். இதையும் சமாளித்து வருகிறார் பழனிச்சாமி. நாங்களே எதிர்க்கட்சி நாங்க போய் என்னத்தை விமர்சிப்பது.. மேலும் கூட்டணி வைத்த கட்சி நாங்கள்.. இன்று கூட்டணியில் இல்லாததற்காக வாய்க்கு வந்தது போல எப்படி பேச முடியும். கூட்டணி விசுவாசத்தை நாங்கள் எப்போதுமே காப்போம் என்று டிப்ளமேட்டிக்காக பதிலளித்து பாஜகவினரையே திகைக்க வைத்தார்.


எந்த பாலைப் போட்டாலும் சிக்ஸர்




எந்த பாலைப் போட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி அடிப்பதைப் பார்த்து திமுகவும் தினுசு தினுசாக அட்டாக் செய்து வருகிறது. அது வீசும் பந்தை லாவகமாக அடித்து எடப்பாடி பழனிச்சாமியும் சமாளித்து வருகிறார். இந்த சண்டை காரணமாக கிட்டத்தட்ட அனைத்துத் தொகுதிகளிலுமே அதிமுகவினரும் சரி, திமுகவினரும் சரி ஆவேசமாக வேலைகளை முடுக்கி விட்டு, களத்தை திமுக Vs அதிமுக என்ற நிலைக்குக் கொண்டு போய்க் கொண்டுள்ளனராம். இது பாஜகவினரை அதிர வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.


சரி எடப்பாடி பழனிச்சாமி இப்படி ஆவேசம் காட்ட வேண்டிய கட்டாயம் என்ன.. ரொம்ப சிம்பிள்.. பாஜகவை 2வது இடத்திற்கு வர விட்டு விடக் கூடாது.. திமுகவுக்கு மாற்று அதிமுக என்று மட்டுமே இருக்க வேண்டும்.. இப்போது அதிமுகவை வலுவான கட்சியாக காட்டினால்தான், அதை வைத்து அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு கடும் நெருக்கடியைத் தர முடியும், ஓ.பி.எஸ் வசம் கட்சி போய் விடாமல் காப்பாற்ற முடியும்.. இப்படி பல கணக்குகளைப் போட்டுத்தான் எடப்பாடியார் தீவிர வேகம் காட்டுகிறாராம்.


நம்பிய பாமக.. வராமலேயே போன விசிக




பாஜகவை கூட்டணியிலிருந்து கழற்றி விட்டதற்கு முக்கியக் காரணமே பாமக, தேமுதிகவுடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிமுக கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையில்தான். இதில் பாமக கடைசி வரை வருவது போல போக்கு காட்டி விட்டு பாஜக பக்கம் போய் விட்டது. விசிக கடைசி வரை உத்தரவாதமே தரவில்லை. திமுகவுடன்தான் தனது கூட்டணி என்பதில் திருமாவளவன் உறுதியாக இருந்தார். பலமுறை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அழைத்தும் கூட அவர் அசையவில்லை. தேமுதிக மட்டுமே அதிமுகவிடம் வந்தது. 


பல முனைகளிலும் அதிமுகவுக்கு சிக்கல்கள் வந்தபோதும் கூட தெளிவான முடிவுகளை எடுத்து தீவிரமாக களப் பணியில் குதித்து விட்டார்கள் அக்கட்சித் தலைவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும் தீவிரமாக தேர்தல் பணிகளில் அதிமுக தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிச்சாமியும் தொகுதி தொகுதியாக தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனல் தெறிக்கப் பேசுகிறார்.


எடப்பாடி பழனிச்சாமியின் கணக்கு




மெகா கூட்டணியை உருவாக்க முடியாவிட்டாலும் கூட அதிமுகதான் வலுவான எதிர்க்கட்சி என்பதை நிரூபிப்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை நோக்கம் என்று சொல்கிறார்கள். இதன் மூலம் கூட்டணியாக இருந்தால்  நிறைய சாதிக்கலாம் என்ற செய்தியை பாஜகவுக்கு பரப்பவும் அவர் துடிப்பாக உள்ளார்.  மேலும் இந்த முடிவின் மூலம் அண்ணாமலை அரசியலுக்கும் முடிவு கட்ட அதிமுக தீவிரமாக இருக்கிறதாம். எனவேதான் பாஜக பற்றி நேரத்தையும், கவனத்தையும் சிதற விடாமல் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்களாம் அதிமுக தலைவர்கள்.


அதிமுகவை மேலும் பலவீனப்படுத்த  வேண்டும் என்று திமுக தீவிரம் காட்டுகிறது.. பாஜகவை 2வது இடத்துக்கு வர விட்டு விடக் கூடாது என்று அதிமுக பதட்டமாக உள்ளது.. அதிமுக இடத்தைக் கைப்பற்றி அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு தன்னைப் பலப்படுத்த பாஜக துடிக்கிறது.. யார் கனவு பலிக்கும்.. யார் தங்களது நோக்கத்தில் வெல்லப் போகிறார்கள்.. ஜூன் 4ம் தேதி தேரியும்.