வங்கி ஊழியர் .. புயல் வேகம்.. அதிரடி பேச்சு.. அனல் பறக்கும் கேள்விகள்.. யார் இந்த மஹூவா மொய்த்ரா?

Su.tha Arivalagan
Dec 09, 2023,10:17 AM IST

கொல்கத்தா: சாதாரண வங்கி ஊழியராக இருந்து அரசியலில் புகுந்து எம்.பியாகி நாடாளுமன்றத்தையே தனது அனல் பறக்கும் கேள்விகளால் சூடாக்கியவர்தான் மஹுவா மொய்த்ரா. இன்று நாடாளுமன்றத்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. திரினமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா எம்.பியாக இருந்தவர். இவர் மீது சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. தொழிலதிபர் கெளதம் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்க பணம் வாங்கினார் மொய்த்ரா என்பதுதான் அந்தப் புகாராகும். இதுகுறித்து நாடாளுமன்ற நெறிமுறைக் குழு மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது.


விசாரணையின்போது தன்னிடம் அநாகரீகமாக கேள்விகள் கேட்டதாக கூறி ஆவேசமாக வெளிநடப்பு செய்திருந்தார் மொய்த்ரா. இந்த நிலையில் நேற்று அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கடந்த 14 வருடமாக அரசியலில் இருக்கிறார் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணாநகர் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பி ஆனவர் மஹுவா மொய்த்ரா. அவர் முதல் முறை எம்.பி.ஆவார்.


மேற்கு வங்க மாநிலத்திலிருந்து எம்.பி ஆனாலும்   கூட இவர் பிறந்தது அஸ்ஸாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில். 1974ம் ஆண்டு அங்கு பிறந்த மஹுவா மொய்த்ராவின் குடும்பம் பின்னர் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தது. அங்குதான் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் மஹுவா. அதன் பிறகு அமெரிக்காவில் உயர் படிப்பு படித்தார்.


படிப்பை முடித்ததும் லண்டன் மற்றும் நியூயார்க்கில் ஜேபி மோர்கன் நிறுவனத்தில் வங்கியாளராகப் பணியாற்றினார். பிறகு ராகுல் காந்தியின் ஆம் ஆத்மி கா சிபாஹி என்ற இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்டு அரசியல் பக்கம் திரும்பினார். 2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டார். 


மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரிகளின் அலை ஓய்ந்து, திரினமூல் காங்கிரஸ் கட்சி உருவாகி அது விஸ்வரூபம் எடுத்த நிலையில் மஹுவாவும் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். 2011 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. அதேபோல 2014 லோக்சபா தேர்தலிலும் டிக்கெட் எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் 2016 சட்டசபைத் தேர்தலில் கரீம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


அவரது அனல் பறக்கும்  பேச்சுத் திறமைதான் அவரது அடையாளமாக இருந்தது. இதனால் அரசியலில் மஹுவா வேகமாக உயர்ந்தார். கட்சிக்குள்ளும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக உருவெடுத்தார்.  2019 லோக்சபா தேர்தலில் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.


லோக்சபாவில் அவரது ஒவ்வொரு பேச்சிலும் அனல் பறந்தது. அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகின. குறிப்பாக அதானி குறித்து அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான் அவரது பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.