mpox பரவல் அதிகரிப்பு.. சுகாதார அவசர நிலையை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்!

Su.tha Arivalagan
Aug 16, 2024,08:25 AM IST

ஜெனீவா: உலகை அச்சுறுத்தும் எம்பாக்ஸ் (குரங்கு அம்மை) நோய்ப் பரவல் குறித்து, சுகாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். கடந்த 2 ஆண்டில் 2வது முறையாக இந்த அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆப்பிரிக்க நாடான, காங்கோ நாட்டில்தான் முதலில் எம்பாக்ஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து அது அக்கம் பக்கத்து நாடுகளில் பரவி வருகிறது. மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவும் நோய் இது. பொதுவாக இது லேசான பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம் சிலருக்கு உயிரைப் பறிக்கும் நிலைக்கும் கொண்டு செல்லும். ஃப்ளூ காய்ச்சலின்போது ஏற்படும் அதே அறிகுறிகள்தான் இந்த எம்பாக்ஸ் நோய்க்கும் தென்படும். உடல் முழுவதும் சலம் பிடித்து கொப்புளம் கொப்புளமாக அம்மை நோய் ஏற்படும்.




இந்த நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் இதை சமாளிக்க ஆயத்தமாகுமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நோய்த் தடுப்பு தொடர்பான ஆய்வுகள், நிதி ஒதுக்கீடுகள், சிகிச்சை முறைகள், நாடுகளிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்குமாறும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


காங்கோவில் இந்த நோய் முதலில் பரவியபோது அது கிளேட் ஐ என்ற வகையைச் சேர்ந்ததாக இருந்தது. தற்போது அது கிளேட் ஐபி ரகமாக உருமாறியுள்ளது. பெரும்பாலும் செக்ஸ் உறவின்போதுதான் (குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்களிடையே)  இந்த நோய்க் கிருமி ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவுமாம். காங்கோவில் தொடங்கி தற்போது புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் பரவி வருகிறது.


சர்வதேச அளவில் நாடுகள் இணைந்து இதற்கு எதிராக செயல்படும்போது இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும், பல உயிர்களைக் காக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதனாம் கெப்ரியேசிஸ் கூறியுள்ளார்.


ஆப்பிரிக்க கண்டத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 517 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 160 சதவீதம் அதிகமாகும்.  தற்போதைய நிலவரப்படி மொத்தம் 13 நாடுகளில் எம்பாக்ஸ் நோய் பரவல் இருப்பது தெரிய வந்துள்ளது.