2 இந்திய இருமல் மருந்துகளை.. உஸ்பெகிஸ்தான் குழந்தைகளுக்கு வழங்க தடை.. ஹூ பரிந்துரை

Su.tha Arivalagan
Jan 12, 2023,10:49 AM IST

ஜெனீவா: இந்தியாவில் தயாரிக்கப்படும் 2 இருமல் மருந்துகளை உஸ்பெகிஸ்தானில், குழந்தைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.


நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் இந்த இருமல் மருந்துகளைத் தயாரிக்கிறது.  இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், இந்த இரு மருந்துகளும் தரக் குறைவானவை. தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை இவை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 


தடை செய்யப்பட்டுள்ள இந்த இருமல் மருந்துகளின் பெயர்கள் -    AMBRONOL syrup மற்றும் DOK-1 Max syrup ஆகியவை ஆகும்.  உஸ்பெகிஸ்தானில் இந்த இருமல் மருந்துகளைச் சாப்பிட்ட சில குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து இந்த மருந்துகள் சர்ச்சைக்குள்ளாகின.


இந்த இருமல் மருந்துகள் குறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதாரத் துறையின் ஆய்வகத்தில் ஆய்வு நடத்தப்பட்டபோது அதில் அதிக அளவிலான டைஎத்திலீன் கிளைகால் இருந்தது தெரிய வந்தது. இது உயிரைப் பறிக்கும் அளவுக்கு அதிகமாக இருந்ததே உயிரிழப்புக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.


டிசம்பர் 22ம் தேதி உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்துகளைச்  சாப்பிட்டு 18  குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்தது. இதையடுத்து மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்துகளை உற்பத்தி செய்வது தொடர்பான உரிமத்தை உ.பி. அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.


இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த நிறுவனத்தின் அனைத்துப் பணிகளும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.