Myths and Facts: இந்த 3 ராசிகாரர்கள் திருப்பதி சென்றால் ஆபத்தா? உண்மை என்ன?

Aadmika
Jul 03, 2024,05:42 PM IST

சென்னை :   சிலருடைய ராசிக்கு சபரிமலைக்குப் போகக் கூடாது என்று சொல்வார்கள். அது போல திருப்பதியையும் சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா.. வாங்க பார்க்கலாம்.


திருப்பதி சென்றால் திருப்பம் வரும், வாழ்வில் இருக்கும் துன்ப நிலை மாறி ஏற்றமான நிலை ஏற்படும் என்பது தான் பல காலமாக பக்தர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும். அப்படி தரித்தால் அனைத்து துன்பங்களையும், கஷ்டங்களையும் ஏழுமலையான் போக்கி விடுவார் என்ற நம்பிக்கை காரணமாக தான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திருப்பதி சென்று தரிசித்து வருகிறார்கள். 




எவ்வளவு கூட்டம், எத்தனை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றாலும் அனைத்தையும் தாண்டி எப்படியாவது ஏழுமலையானை, அரை நிமிடமாவது பார்த்து விட வேண்டும் என்று தான் பலரும் குடும்பம் குடும்பமாக வந்து திருப்பதியில் காத்திருக்கிறார்கள். பல அற்புதங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த, புண்ணிய தலமாகவே பார்க்கப்படுவதாலேயே பூலோக வைகுண்டம் என்றும் திருப்பதியையும், கலியுக பிரத்யக்ஷ தெய்வம் என ஏழுமலையானையும் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். திருப்பதியின் மகிமைகளை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாக திருப்பதி விளங்குகிறது.


திருப்பதி சென்றால் ஒரு நாள் தங்கி, சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். குறைந்தது 8 மணி நேரமாவது திருப்பதி மலை மீது இருந்தால் மட்டுமே திருப்பதி சென்ற முழு பலனையும் அடைய முடியும் என சொல்லப்படுகிறது. சந்திரனின் ஆற்றல் அதிகம் நிறைந்த தலம் என்பதாலும், அபூர்வமான சந்திரகாந்த கல்லால் ஆனதாலும் இந்த மலைக்கு செல்வத்தையும், தெய்வீக சக்தியையும் ஈர்க்கும் தன்மை உண்டு. சந்திரன், மனோகாரகன் என்பதால் மனதில் தெளிவையும், நிறைவையும் அருளக் கூடிய தன்மை திருமலைக்கு உண்டு. 


ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்றால் கடனாளி ஆகி விடுவார்கள். அவர்களுக்கு நோய்கள் ஏற்படும் என்ற தகவல் பரவி வருகிறது. அதே போல் திருவோணம், அஸ்தம் போன்ற நட்சத்திரக்காரர்களும் திருப்பதி சென்றால் கஷ்டம் வரும் என சொல்லுகிறார்கள். இதற்கு ஜோதிட ரீதியாகவும் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. 


உண்மையில் திருப்பதிக்கு குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டும் தான் வர வேண்டும், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் வரக் கூடாது என்று திருப்பதி கோவில் பூஜை முறைகளை வகுத்துக் கொடுத்த ராமானுஜ ஆச்சாரியாரோ அல்லது இத்தலத்தை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களோ எதுவும் குறிப்பிடவில்லை. திருப்பதி செல்வதும், திருப்பதி செல்லாமல் இருப்பதும் அவரவர்களின் விருப்பம். ஒரு சிலருக்கு திருப்பதி சென்று திரும்பியதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக அனைவருக்கும் அப்படியே நடக்கும், நடக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்பதே ஆன்மிக ஆன்றோர்கள் சொல்லும் கருத்தாகும்.