மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டி முடிச்சுத் திறப்பீங்க.. மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் கேள்வி

Meenakshi
Aug 29, 2024,02:55 PM IST

மதுரை:   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டி முடிக்கப்படும் என்றும், மத்திய அரசு எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்யவும்  ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. பிரதமராக நரேந்திர மோடி பதவிக்கு வந்த 2வது ஆண்டில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. இப்போது அவரது 3வது ஆட்சி காலம் நடந்து வருகிறது. இதுவரை கட்டடம் கட்டப்படாமல் உள்ளது. இது பெரும் சர்ச்சையானது.  மத்திய அரசு மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.




கடந்த லோக்சபா தேர்தலின் போது, உதயநிதி ஸ்டாலின் ஒற்றைச் செங்கல்லைத் தூக்கிக் காட்டி இதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறி பிரச்சாரம் செய்தது மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மொத்த கட்டுமானமும் 33 மாதங்களில் முடிக்கப்படும் என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது.


மதுரையுடன் சேர்த்து பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மதுரையில் மட்டும் இன்னும் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. இது குறித்து பாஸ்கர் என்பவர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கி முடிக்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எப்போது கட்டி முடிப்பீர்கள் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.


இதற்கு, கொரோனா தொற்று காலத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026க்குள் பணி முடிந்துவிடும் என மத்திய அரசு சார்பில் பதில்அளிக்கப்பட்டது.


கொரோனா 2023ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. அதை காரணம் காட்டாதீர்கள் கட்டுமானப்பணி எப்போது நிறைவடையும் என மத்திய சுகாதரத்துறை செயலாளர் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டு, வழக்கை செப்., 24க்கு ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்