என்னாச்சு.. குஷ்பு இன்னும் பிரச்சாரத்திற்குக் கிளம்பலையா.. டைம் வேகமாக ஓடிட்டிருக்கே!

Manjula Devi
Mar 29, 2024,06:56 PM IST
சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு எப்போது பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.

இதுவரை பாஜகவுக்காக குஷ்பு தனது பிரச்சாரத்தைத் தொடங்காமல் உள்ளார். அவர் மட்டுமல்ல பல முக்கியத் தலைவர்கள், நடிகர், நடிகைகள் கூட இன்னும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படாமல் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக 90களில் அனைவரின் மனதையும் கவர்ந்து, கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பு தற்போது அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை குஷ்பூ திமுகவில் இணைந்து அக்கட்சிகாக பிரச்சாரம் செய்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அதே வருடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2020 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.



சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் மக்களவைத் தேர்தலில் ஈரோடு அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதுகுறித்து கேட்கப்பட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா, ஆகியோர் எங்கு போட்டியிட சொன்னாலும் நான் அங்கு போட்டியிடுவேன். எங்கு பிரச்சாரம் செய்ய சொன்னாலும் நான் முழு வீச்சில் பிரச்சாரம் செய்வேன். பாஜக வெற்றி பெற வேண்டும் அதுதான் முக்கியம் என்று குஷ்புவும் கூறி வந்தார். 

ஆனால் அவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாஜகவின் தமிழ்நாடு ஸ்டார் பேச்சாளர்கள் பட்டியலில் குஷ்புவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதுவரை குஷ்புவின் பிரச்சாரப் பயணம் குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை. அவர் எப்போது பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன்,  விருதுநகரில் ராதிகா, கோவையில் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு குஷ்பு முக்கியமாகப் பிரச்சாரம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிரச்சாரத்தில் குதிக்கும்போது பாஜக தரப்பு மேலும் உற்சாகமடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் அத்தனை பேரும் குஷ்புவைு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.