எங்களை கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்.. வாட்ஸ்அப்!

Meenakshi
Apr 26, 2024,04:31 PM IST

டெல்லி: வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களின்  தனியுரிமையை பாதிக்கும் வகையில் செயல்பட எங்களை மத்திய அரசு  கட்டாயப்படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதனை எதிர்த்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.


வாட்ஸ்அப் உரையாடல் என்பது இரு பயனர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உரிமை என்றும், அந்த தகவல்களை வாட்ஸ் அப் நிர்வாகம் கூட பார்க்க முடியாது.  இதன் காரணமாக தான் பலர் தங்கள் தகவல்களை வாட்அப்பில் பரிமாறிக்கொள்கின்றனர். இதன் காரணமாகவே வாட்ஸ் அப் செயலியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.




இந்நிலையில், பயனர்களுக்கு தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜாஸ் கரியா கூறுகையில், எங்கள் என்கிரிப்ஷன் முறை மிக பாதுகாப்பானது. அதை உடைக்கச் சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும். வாட்ஸ்அப் நிறுவனத்தைப் பொறுத்தவரை தனியுரிமை தான் எங்களின் முக்கிய கொள்கை. இந்த தனியுரிமையைப் பயனாளர்களுக்குத் தர எண்ட் டூ எண்ட்  என்கிரிப்ஷன் ரொம்பவே முக்கியம். வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜை அனுப்பியவர், அதைப் பெறுபவரை தவிர வேறு யாராலும் அதை படிக்க முடியாது என்றார்.


இருப்பினும், தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட் இதில் சிக்கல் இருப்பது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டது. விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.