சென்னைக்கு.. 90 கி.மீட்டர் தொலைவில் மிச்சாங்.. இரவு வரை மழை.. அடுத்து என்ன நடக்கும்?

Su.tha Arivalagan
Dec 04, 2023,05:42 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உலுக்கி எடுத்து வரும் கன மழையை ஏற்படுத்தியுள்ள மிச்சாங் புயலானது தற்போது வடக்கில் நகர்கிறது. இருப்பினும் இன்று இரவு வரை சென்னைக்கு கன மழை உண்டு. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை வானிலை மையம் விளக்கியுள்ளது.


சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிச்சாங் புயல் சென்னைக்கு கிழக்குத் தென்கிழக்கில் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 


இது தீவிர புயலாக வலுவடைந்து, தொடர்ந்து வட தமிழ்நாடு தெற்கு ஆந்திரா கரையை ஒட்டி நகரும். பின்பு ஆந்திராவின்  நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே, பபட்லா என்ற இடத்தில் நாளை முற்பகல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது அதி தீவிரமான புயலா கரையைக் கடக்கும் என்பதால் சேதம் மிகப் பெரிதாகவே இருக்கும். 




புயல் கரையைக் கடக்கும்போது,  மணிக்கு 90 முதல் 100  கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும். காலையில் 10 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்த நிலையில், தற்போது 8 கிலோமீட்டர் என்ற அளவுக்கு குறைந்து நகர்ந்து வருகிறது. புயலின் நகரும் வேகம் குறைந்ததால்தான் சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், மாவட்டங்களில் கன மழை தொடர்கிறது.