ராகுல் காந்தியின் சட்ட போராட்டம் முடிந்ததா.. அடுத்து என்ன செய்ய வேண்டும்?

Aadmika
Aug 05, 2023,10:25 AM IST

டெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்ததாக எம்.பி.,யாக மீண்டும் நாடாளுமன்றத்திற்குராகுல் காந்தி செல்ல வேண்டும் என்றால் அதற்கு நடைமுறை விதிகள் என்ன? 


பாஜக எம்எல்ஏ., தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இந்த ஆண்டு மார்ச் மாதம் சூரத் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த போதும், அந்த மனு விசாரைணக்கு ஏற்றதல்ல எனக் கூறி சூரத் மாவட்ட நீதிமன்றமும், குஜராத் ஐகோர்ட்டும் ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தன. இதனையடுத்து ராகுல் காந்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 


ராகுல் காந்தியின் மனுவை விசாரணைக்கு ஏற்று, நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வயநாடு எம்.பி.,யாக ராகுல் காந்தி தொடரவும், பார்லிமென்டிற்கு செல்லவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் ராகுல் காந்தியின் சட்ட போராட்டம் முடிந்து விட்டதா என்றால் கிடையாது. அதே போல் உடனடியாகவும் பார்லிமென்ட் கூட்டத்திற்கு அவரால் செல்ல முடியாது.


சுப்ரீம் கோர்ட் உத்தரவு வெளியான சிறிது நேரத்திலேயே காங்கிரசின் அதிர்ரஞ்ஜன் செளத்ரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சென்று உடனடியாக ராகுல் காந்தியின் லோக்சபா உறுப்பினர் பதவியை திரும்ப அளிக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார். இதை ஏற்ற சபாநாயகர், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகல் வருவதற்காக தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகல் கிடைத்ததும் அதை லோக்சபா செயலகத்திடம் சமர்பிக்க வேண்டும். லோக்சபா செயலக அதிகாரிகள் அதை கவனமாக படித்து விட்டு, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படி, ராகுல் காந்தி எம்.பி.,யாக தொடர்வதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை என சரி பார்த்த பிறகே, அதிகாரப்பூர்வமாக ராகுல் காந்தியின் எம்.பி., பதவி திரும்ப அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். இந்த சட்ட நடைமுறைகளை செயல்படுத்த கால அளவு என்று எதுவும் கிடையாது.


அதே போல், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேல்கோள் காட்டி குறிப்பிட்டு, தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டையை ரத்து செய்யக் கோரி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, சிறை தண்டனையை ரத்து செய்வதாக சூரத் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு தான் இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் சட்ட போராட்டம் முடிவுக்கு வரும்.