அதிமுகவா, பாஜகவா.. "10 தொகுதிகளுக்கு டீலா".. விறுவிறுப்பான எதிர்பார்ப்பில் பாமக.. யாரிடம் போகும்?

Manjula Devi
Mar 13, 2024,05:50 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிப் பேச்சு வார்த்தையில் சுமூகம் ஏற்பட்டடுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்று கூட்டணி உறுதியாகும் என்றும் சொல்லப்படுகிறது.


லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தீவிரமாக கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் இறங்கியுள்ளது. பாஜக கூட்டணியில் ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் அணி, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சரத்குமார் தனது கட்சியையே பாஜகவுடன் சேர்த்து விட்டார். 




அமமுக - ஓபிஎஸ்ஸுக்கு தலா 4?


இந்தக் கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்துள்ளது. இதில் அமமுக விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் பாஜக ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


அதிமுக கூட்டணியில் பாமகவை இணைப்பதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பாமக நிறுவனர் ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே நேரத்தில் டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இரு கட்சிகளுடன் பாமக தனித்தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், பாமக உடன் அதிமுக இணையுமா.. பாமக உடன் பாஜக இணையுமா.. என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 


கூட்டணி குறித்த பாமக தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படாததால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் பாஜகவோடு பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம். இந்த பேச்சுவார்த்தையில்  பாமகவுக்கு 10 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம், அமைச்சர் பதவி ஒதுக்க வேண்டும் என பாமக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாம்.


ஆனால், பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 8 தொகுதிகளும் ,ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தால், உடன்பாடு இன்று இறுதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.