வெள்ளத்தில் மிதக்கும் அம்பத்தூர் பால் பண்ணை.. ஆவின் தட்டுப்பாட்டுக்கு இதுவும் காரணம்!

Su.tha Arivalagan
Dec 06, 2023,11:35 AM IST

சென்னை: சென்னையிலும், புறநகர்களிலும் பல இடங்களில் ஆவின் பால் சப்ளையில் தொடர்ந்து பிரச்சினை இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அம்பத்தூர் பால் பண்ணையில் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளதால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.


பேரிடர் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மிகப் பெரிய அளவில் பஞ்சம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் புயல் போய், மழையும் நின்று விட்ட போதிலும் கூட பாலுக்கும், பிரட் போன்றவற்றுக்கும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்களிலும் பற்றாக்குறை நிலவுவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை ஆவின் பாலை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள். காரணம், அதன் தரம். அம்பத்தூர், மாதவரம், சோழிநங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளிலிருந்து ஆவின் பால் நகருக்கும், நகரின் புறநகர்களுக்கும் சப்ளை ஆகிறது. 




இந்த முறை அடித்த புயல் மற்றும் பேய் மழையால் இந்த பால் பண்ணைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. காரணம், அம்பத்தூர் பால் பண்ணைக்குள் வெள்ளம் புகுந்து விட்டதால் அங்கு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் பண்ணையில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அங்கிருந்து எங்கெல்லாம் பால் சப்ளை ஆகுமோ அங்கெல்லாம் பால் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.


பால் கிடைக்காததால் பெரும் பாதிப்பை மக்கள் சந்தித்துள்ளனர். குறிப்பாக கைக்குழந்தைகளை வைத்திருக்கும் வீடுகளில் பால் இல்லாமல் பெரும் அவதியாக உள்ளது. இந்த பால் பற்றாக்குறை குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், போதிய அளவு பால் உள்ளது. இருப்பிலும் வைத்துள்ளோம். அம்பத்தூர் பால் பண்ணையில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


மக்கள் பீதி அடையத் தேவையில்லை.  தேவையில்லாமல் கூடுதலாக பால் பாக்கெட்டுகளை வாங்கவும் முயல வேண்டாம். அப்படிச் செய்யும்போதுதான் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வழக்கமான அளவிலேயே பால் வாங்குங்கள். எல்லோருக்கும் பால் கிடைக்கும். பயப்படத் தேவையில்லை. விரைவில் அனைத்து பால் விற்பனையகங்களிலும் நிலைமை சீரடையும் என்றார் மனோ தங்கராஜ்.


இதற்கிடையே,  பல இடங்களில், சில்லறை விற்பனைக் கடைகளில் பால் பாக்கெட்டுகளை அதிக விலைக்கு வைதுத வியாபாரிகள் விற்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இதுபோல நெருக்கடியைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜும் இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.