மொத்தம் 6 கேபினட் அமைச்சர் பதவி.. இதுதான் பாஜக முடிவாம்.. யார் யாருக்கு என்ன கிடைக்கும்?

Su.tha Arivalagan
Jun 06, 2024,05:33 PM IST

டெல்லி: கூட்டணிக் கட்சிகளுக்கு 6 கேபினட் அமைச்சர் பதவிகளைத் தர பாஜக முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் கிளம்பியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் என்று தெரியவில்லை.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மொத்தம் 35 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் எம்.பிக்கள் பலம் கொண்ட கட்சிகள் என்று பார்த்தால்,  21 கட்சிகள்தான். இதில் 2 மற்றும் அதற்கு மேல் எம்பிக்களைக் கொண்ட கட்சிகள் 9 பேர் தான். அதில் 5 அல்லது அதற்கு மேல் எம்பிக்கள் பலம் உள்ள கட்சிகள் என்று பார்த்தால் 5 பேர்தான். எம்.பிக்கள் பலம் அதிகம் கொண்ட கட்சிகள் என்று பட்டியலிட்டால்,  தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதாதளம் (12), சிவசேனா (ஷிண்டே - 7), லோக் ஜனசக்தி கட்சி (5), ராஷ்டிரிய லோக்தளம் (2), மதச்சார்பற்ற ஜனதாதளம் (2), ஜன சேனா கட்சி (2) ஆகியவை அதில் வருகின்றன.




இந்த 7 கட்சிகளில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்று தெரியவில்லை. அப்படியே கிடைத்தாலும் இணை அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவிக்கே அதிக வாய்ப்புள்ளது. பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கும் அதுபோலவே கிடைக்க வாய்ப்புண்டு. பெரிய கட்சிகள் வரிசையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிக அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. அடுத்து ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கும் முக்கிய இலாகாக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சிவசேனா, லோக் ஜன சக்தி, ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி கொடுத்தாக வேண்டிய நிலைமை உள்ளது.


இதில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம்தான் மிக முக்கிய கட்சிகள் என்பதால் இவர்களை சமாளித்து விட்டால் போதும், மற்றவர்களை சரிக்கட்டி விடலாம் என்ற கணக்கில் பாஜக உள்ளது. அதேசமயம், எக்காரணம் கொண்டும் 6 கேபினட் அமைச்சர் பதவிகளுக்கு மேல் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுப்பதில்லை என்ற முடிவிலும் பாஜக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, இது உறுதிப்படுத்தப்படாத ஒன்றுதான். 


தெலுங்கு தேசம் கட்சி - மக்களவை சபாநாயகர் பதவி, நிதித்துறை, வேளாண்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பதவிகளை எதிர்பார்க்கிறதாம். அந்தக் கட்சியைப் பொறுத்தவரை 4 கேபினட் அமைச்சர்கள், 3 துணை அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கிறதாம். இத்தனையும் கிடைக்குமா என்று தெரியவில்லை. இதுதவிர தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் நாயுடு எதிர்பார்க்கிறாராம்.


மறுபக்கம் நிதீஷ் குமாரும் முக்கிய இலாகாக்களை எதிர்பார்க்கிறாராம். மேலும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்  என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாராம். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயம் எடுத்தாக வேண்டும் என்பதும் நிதீஷ் குமார் தரப்பின் ஒரு கோரிக்கையாக சொல்லப்படுகிறது.


ஆனால் சபாநாயகர் பதவியை விட்டுத் தருவதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லையாம். துணை சபாநாயகர் பதவியை வேண்டுமானால் தர அது தயாராக இருக்கிறதாம்.


டெல்லி வட்டாரத் தகவல்களின்படி உள்துறை, நிதித்துறை பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை பாஜக வசமே இருக்கும் என்று சொல்கிறார்கள். இவை மிக முக்கியமான துறைகள் என்பதால் இவற்றைத் தர பாஜக விரும்பவில்லையாம்.  அதேசமயம், அவற்றின் இணை அமைச்சர் பதவிகளில் கூட்டணிக் கட்சியினருக்கு இடம் அளிக்க வாய்ப்புள்ளதாம். விரைவில் இலாகாக்கள் தொடர்பான பேச்சுக்கள் முடிவடைந்து சுமூக நிலையை உருவாகக்க பாஜக தரப்பு ஆர்வமாக உள்ளதாம்.