திடீர் உடல்நலக்குறைவு ஏன்.. மதிமுக எம்.பி. கணேசமூர்த்திக்கு என்னாச்சு?.. பரபரப்பில் ஈரோடு

Su.tha Arivalagan
Mar 26, 2024,10:05 AM IST

ஈரோடு:  ஈரோடு மதிமுக எம்பி ஆக உள்ள கணேசமூர்த்தி உடல்நிலை குறித்து பல்வேறு வகையான தகவல்கள் பரவி வருவதால் மதிமுக வட்டாரம் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


ஈரோடு தொகுதி எம்பி யாக இருப்பவர் கணேசமூர்த்தி. இவர் மதிமுகவை சேர்ந்தவர். கடந்த 2019 தேர்தலில் இவர் திமுக கூட்டணியில் இடம் பெற்று உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த தொகுதியை திமுக தானே எடுத்துக் கொண்டு விட்டது. அதற்கு பதிலாக வேறு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கியது.




இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசமூர்த்தி தனக்கு மீண்டும் எம்பி சீட் கிடைக்காது என்று அதிர்ச்சியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென உடல்நல குறைவு காரணமாக வீட்டுக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கோவையில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கணேசமூர்த்தி உடல்நிலை குறித்து பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் உள்ளது. இருப்பினும் இது குறித்து உறுதியான எந்த விதமான தகவலையும் யாரும் இதுவரை வெளியிடவில்லை. சீட் கிடைக்காத அதிருப்திலும் மனவேதனையிலும் கணேசமூர்த்தி இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மதிமுகவிலிருந்து பல மூத்த தலைவர்கள் வெளியேறிய போதிலும் கூட வைகோவுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வருபவர் கணேசமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு மதிமுக என்றால் இவர்தான் நினைவுக்கு வருவார். இந்த நிலையில் கணேசமூர்த்தியின் உடல் நல பாதிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.