பட்ஜெட்டால் அதிருப்தி.. நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பில்.. மேற்கு வங்காள மாநிலமும்இணைந்தது!

Manjula Devi
Jul 25, 2024,03:04 PM IST

டெல்லி: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 27ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 




நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இதில் பல்வேறு வரி சலுகைகள், வரி குறைப்பு தொடர்பான பல அறிவிப்புகள் வெளியாகின. அதே சமயம் பீகார் மற்றும் ஆந்திராவிற்கு ஏராளமான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. அதேசமயம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


இது இந்தியாவிற்கான பட்ஜெட் கிடையாது. பீகார், ஆந்திராவுக்கான பட்ஜெட் என பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கும்போது தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. எனவே நான் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என்று அதிரடியாக ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த நிலையில் மேற்கு வங்கமும் நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்பில் இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தை ஏராளமான முதல்வர்கள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.