Rain: சூப்பர் மழை காத்திருக்கு.. ஒரு வாரத்துக்கு குடை தேவைப்படும்.. ரெடியா இருங்க மக்களே!

Su.tha Arivalagan
May 12, 2024,09:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் குஷியடைந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் தற்போது கோடைகாலம் நடந்து வருகிறது. ஆரம்பிப்பதற்கு முன்பே அக்னி சட்டியை தலையில் தூக்கி வைத்தாற் போல அப்படி ஒரு வெயில் வெளுத்தெடுத்தது. பல ஊர்களிலும் 110 டிகிரி வரைக்கும் வெயில் கொளுத்தி மக்களை அயர வைத்து விட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்ப நிலை அடியோடு குறைந்துள்ளது.


இந்த நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:




மே 12 - தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூ,ர் ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மே 13 - தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மே 14 - தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மே 15 - திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மே 16 - நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மே 17 மற்றும் 18 - தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் மே 12 முதல் 16 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையானது உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இயல்பை ஓட்டியும், ஓரிரு இடங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்ககூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டமாக இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.