"இறுகப்பற்றும்" வேலையில் "புயல்".. இன்னிக்கு பெருசா மழை இருக்காது.. நாளை முதல் வான வேடிக்கை!

Su.tha Arivalagan
Dec 01, 2023,09:04 AM IST

சென்னை: வங்கக் கடல் காற்றழுத்தத் தாழ்வானதா புயலாக மாறும் கோணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று வட தமிழ்நாட்டில் பெரிதாக மழை இருக்காது என்றும், காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறியதும் மழை பெய்யத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.


வங்கக் கடலில் குறைந்த காற்றவுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது அடுத்து கட்டமாக தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த மண்டலமாகவும் மாறி, அடுத்து புயலாக உருவெடுக்கும். புயலாக மாறும்போது இதற்கு மிச்சாங் என்று பெயரிடப்படும்.




தற்போது வட தமிழ்நாட்டில் பெரிதாக மழை இல்லை. இரவில் சற்று பெய்தது. காலையில் அலுவலகம் போகும் நேரத்தில் சிறிது நிமிட மழை இருக்கிறது. மற்றபடி இன்று பெரிதாக மழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். புயலானது இப்போதுதான் உருவாக்கத்தில் இருக்கிறது. மேகக் கூட்டங்கள் ஒன்றிணைந்து இறுகப் பற்றி புயலாக வலுவெடுத்ததும்தான் நமக்கான மழை குறித்து கணிக்க முடியும்.


புயல் சின்னம் நகரும் திசை குறித்து இன்று தெளிவாகத் தெரிந்து விடும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.  புயல் சின்னமானது வலுவடைந்து புயலாக மாறியதும் மழை அதிகரிக்கத் தொடங்கும். புயலானது புதுச்சேரிக்கும், தெற்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் இடையே வட தமிழ்நாட்டில் கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


அது சென்னையில் கரையைக் கடக்குமா அல்லது சென்னைக்கு அருகே கரையைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.