ராமர் கோவிலை எதிர்க்கவில்லை.. மசூதியை இடித்து கட்டியதில்தான் உடன்பாடு இல்லை.. உதயநிதி ஸ்டாலின்

Meenakshi
Jan 18, 2024,03:49 PM IST

சென்னை: அயோத்தியில் கோவில் கட்டுவதில் எங்களுக்கு பிரச்சினை கிடையாது. ஆனால் அங்கிருந்த மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் தான் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


ஜனவரி 21ஆம் தேதி திமுக இளைஞரணி இரண்டாவது மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான வேலைகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திமுக இளைஞரணி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.




அதில் ஒன்றாக மாவட்டச் சுடர் ஓட்டத்தை இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த சுடர் ஓட்டம் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து, மாநாடு நடைபெறும் சேலம் வரை நடைபெற உள்ளது.


இந்தச் சுடர் ஓட்டம் எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்  வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை ஜனவரி 20ஆம் தேதி பிற்பகல் 1:30 மணி அளவில் சென்றடையும் என திமுக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ராமர் கோவில் விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம். அவர்கள் கர சேவைக்கு ஆட்களை அனுப்பினார்கள். திமுக எந்த மதத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது என்று கலைஞர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.


ஆன்மீகத்தையும் அரசியலையும் ஓன்றாக்காதீர்கள். அயோத்தியில்  கோவில் கட்டுவதில் எங்களுக்கு பிரச்சனை கிடையாது.  ஆனால் அங்கு இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியது தான் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என்றார் உதயநிதி ஸ்டாலின்.




பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், கால் வலி காரணமாக அயோத்தி ராமர் கோவிலில் பங்கேற்க போவதில்லை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் ஈபிஎஸ் சுக்கு அடிக்கடி கால் வலி ஏற்படுகிறது என்று சிரித்தபடி கூறினார் உதயநிதி ஸ்டாலின்.