நாங்க ஒன்னும் பிரியாணி சாப்பிட ஆசைப்படல.. பாஜக.,வை செமையாய் கலாய்த்த கார்கே

Aadmika
Sep 21, 2024,04:00 PM IST

ஜம்மு : நாங்கள் ஒன்று பிரியாணி சாப்பிடவோ, பாகிஸ்தானியர்களை கட்டிப்பிடிக்கவோ ஆசைப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் விறுவிறுப்படைந்து வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காஷ்மீரில் முகாமிட துவங்கி விட்டனர். இந்நிலையில் ஜம்முவின் தேர்தல் பணிகளை கண்காணிக்க சென்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் செய்தியாளர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கிண்டலாக பதிலளித்தது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.



மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் கூறும் அனைத்தும் சுத்த பொய். அவர்கள் பிரச்சனைகளை திசை திருப்ப பார்க்கிறார்கள். நாங்கள் ஒன்றும் பிரியாணி சாப்பிடவோ, அவர்களைக் கட்டிப்பிடித்து உறவு கொண்டாடவோ ஆசைப்படவில்லை என்றார்.

திருப்பதி லட்டு விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த கார்கே, விசாரணை நடந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். உண்மை எதுவாக இருந்தாலும் அதை வெளிக் கொண்டு வந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அப்படி ஏதாவது நடந்திருந்தால் அது சரியானது கிடையாது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களையும், அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பாதிக்கும் என்றார். 

காங்கிரஸ் எம்.பி.,க்கள் குமாரி ஷெல்ஜா மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா குறித்து மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறி கருத்து தொடர்பாக பதிலளித்த கார்கே, அது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. முதலில் அவர்கள் அவர்களின் கட்சியை பற்றி யோசிக்க வேண்டும். அவர்கள் கட்சியில் இருந்து பல தலைவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் வீடு எப்படி இருக்கிறது என்பதை கவனித்து அதை சரி செய்து விட்டு, அதற்கு பிறகு மற்றவர்கள் மீது கவலைப்படட்டும் என்றார் கார்கே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்