நீ இல்லாததை இன்னும் நம்ப முடியல தங்கம்.. மகளை நினைத்து அழும் விஜய் ஆன்டனி மனைவி

Aadmika
Dec 10, 2023,05:48 PM IST

சென்னை : மகள் இறந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர் இல்லாமல் போனதை நம்ப முடியவில்லை என காண்போரின் மனதை உருக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் தனது மன வேதனையை பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் ஆன்டனியின் மனைவி பாத்திமா.


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பிறகு நடிகராக ஆனவர் விஜய் ஆன்டனி. இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என அவதாரங்கள் எடுத்து வருகிறார் விஜய் ஆன்டனி. அவரது மூத்த மகள் மீரா, செப்டம்பர் 19 ம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 16 வயது மகள் திடீரென தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து விஜய் ஆன்டனியின் குடும்பம் இன்னும் மீளவில்லை.




விஜய் ஆன்டனியும், அவரது மனைவி பாத்திமாவும் தங்களின் எக்ஸ் தளங்களிலும், பேட்டிகளிலும் தங்களின் மகள் இறந்த சோகம் குறித்து பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் மகள் இறந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் தனது மன வேதனையை எக்ஸ் தளத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளார் பாத்திமா.


அவர் தற்போது வெளியிட்டு பதிவில், " மீரா தங்கம் நீ தொடுவதற்காக உன்னுடைய பியானோ காத்திருக்கிறது. நீ தொடுவதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் எங்களை விட்டு இவ்வளவு சீக்கிரம் சென்று விட்டாய் என்பதை எங்களால் இன்னும் நம்ப முடியவில்லை. ஒருவேளை இந்த உலகம் உனது ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அம்மா இன்னும் இந்த உலத்தில் தான் இருக்கிறேன். வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையேயான கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு வெறுமையாக உள்ளது. நான் உன்னை சந்திக்கும் வரை நன்றாக சாப்பிட்டு, சந்தோஷமாக இரு. லாரா மிஸ் செய்கிறாள் உன்னை" என குறிப்பிட்டுள்ளார்.


இந்த பதிவுடன் தனது மகளுடன் தான் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றையும் பாத்திமா பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பாத்திமாவிற்கு ஆறுதலும், தைரியமும் சொல்லி வருகின்றனர். தைரியமாக இருக்கும் படியும் ஆறுதல் சொல்லியும், தங்கள் வேதனையை பகிர்ந்தும் வருகின்றனர்.