வயநாடு நிலச்சரிவு.. ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன்

Meenakshi
Aug 01, 2024,12:27 PM IST

திருவனந்தபுரம்:   வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று   கேரள முதல்வர்  பினராயி விஜயன் பார்வையிட்டார்.


கேரள மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வந்தது. தொடர் மழை காரணமாக வயநாடு மாவட்டம், முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.திடீர் என இரவில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் விழுந்தது. அப்பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280த் தாண்டியுள்ளது. 250க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 




மேலும் 500க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்பதால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் தற்காலிக பாலம் அமைக்கும் பணி மட்டும் இரவு முழுவதும் நடைபெற்று காலையில், 2 ஜேசிபி வாகனங்கள் அந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 


மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் என்று அச்சம் நிலவி வருகிறது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், கேரள முதல்வர் பிரனாயி விஜயன்   வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று   பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மீட்பு பணிகளை விரைந்து செய்யவும் முடுக்கிவிட்டுள்ளார். வயநாடு முன்னாள் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளனர்.