கேரளாவில் நிலச்சரிவு.. என்னுடைய எண்ணமெல்லாம் உங்களுடன்.. நடிகர் விஜய் இரங்கல்

Meenakshi
Jul 30, 2024,05:42 PM IST

சென்னை: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க.தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த சில் நாட்களாக  பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்தவர்களில் இது வரைக்கு 107 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. 150க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிர் சேதம் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கேரள தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், உள்ளூர் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




நடிகர் விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். தி கோட் பட சூட்டிங்கிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் கேரளா சென்றிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் நெடுநேரம் காத்திருந்து  விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் கேரள நிலச்சரிவு விஜய்யையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்த சம்பவம் குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கேரளத்தின் வயநாடு நிலச்சரிவின் சோகமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும்" , பிரார்த்தனைகளும் துயரமுற்ற குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.