மனதை உலுக்கிய சம்பவம்.. நிலச்சரிவில் உயிரிழந்த மகளின் கைக்கு.. இறுதிச் சடங்கு செய்த தந்தை!

Meenakshi
Aug 05, 2024,01:13 PM IST

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தனது மகள் ஜிசாவின் கைக்கு இறுதிச் சடங்கு  செய்த தந்தை ராமசாமியைப் பார்த்து அந்த ஊரே அழுதது. நிலச்சரிவில் சிக்கி இறந்த ஜிசாவின் உடல் கிடைக்கவில்லை. ஒரு கை மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் கையை வெள்ளைத் துணியால் சுற்றி தகன மேடையில் வைக்கப்பட்டிருந்தது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.


கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ம் தேதி கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் காட்டாற்று வெள்ளமும் ஊருக்குள் புகுந்தது. முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தன. இந்த கிராமங்களில் குடியிருந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுவரையில், 360க்கும் மேற்பட்டவர்கள் உயிழந்துள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலரை காணமல் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சகதிக்குள் புதைத்த உடல்களை தேடி எடுக்கும் போது உடல் உறுப்புகள் தனித்தனியாக சிக்கி வருகின்றன. அவற்றை அடையாளம் காணும் பணியும் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், வயநாட்டை சேர்ந்த ராமசாமி என்பவர் தனது மகள் ஜிசாவை காணாமல் தேடி வந்தார். மீட்பு குழுவினரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். 




தீவிர தேடுதலுக்கு பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது. அந்த கையில் திருமண மோதிரமும், அந்த மோதிரத்தில் ஜிசாவின் கணவர் பெயரும் எழுதியிருந்தது. இதை வைத்து அது தன் மகள் ஜிசாவின் கை என ராமசாமி உறுதி செய்தார். வெறும் கை மட்டுமே கிடைத்ததால் மனம் உடைந்து கதறி அழுதபடி இருந்தார் ராமசாமி. 


மகளின் ஒரு கையை மட்டும் ஒரு வெள்ளைத்துணியால் கட்டி தகன மேடையில் வைத்து இறுதி சடங்கும் செய்தார். அத்துடன் தனது மகளின் கையைப்பார்த்து ராமசாமி கதறி அழுததும் பலரையும் நிலை குலையச் செய்தது. இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி அனைத்து தரப்பினரையும் மனம் கலங்கச் செய்துள்ளது. இதை பார்த்தவர்கள் இயற்கைக்கு மனிதன் மீது என்ன தான் கோபமோ என்று புலம்பி வருகின்றனர்.